Wednesday 25 September 2013

நிகழ்வும் நினைப்பும் : ...

நிகழ்வும் நினைப்பும் :

நேற்று (24.9.13) மாலை மதுரை பிரேம் நிவாஸ் ஹோட்டலில் ரோட்டரி கிளப்-கிழக்கு கிளையின் சார்பாக சிறப்புக்கூட்டம். பி,எஸ்.என்.எல்.மதுரையில் பணியாற்றும் ராமச்சந்திரன் அதன் தலைவர். 'புத்தகங்களும் வாழ்க்கையும் ' என்னும் தலைப்பில்  என்னை  உரையாற்ற அழைத்திருந்தார்கள். . புத்தகங்கள் -என்னை ஈர்த்த தமிழ் மற்றும் ஆங்கிலப்புத்தகங்கள் சிலவற்றைப் பற்றியும் அவை சொல்லும் செய்தி பற்றியும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதுமே , எங்கேயும் புத்தகஙகளைப் பற்றிப்பேசுவது என்றால் உடனே தயார் என்பது போல மனநிலை இருக்கிறது .பேசிட முடிகின்றது.

                         பேசி முடித்தவுடன் கேள்வி நேரம் இருந்தது. பேராசிரியர் வில்பர்ட், நூலகத்தைப் பற்றியும், வாசிப்பை நேசிப்பதைப் பற்றியும் பேசினீர்கள். நன்றாக் இருந்தது. ஆனால் கல்லூரிகளில் வைக்கப்படும் நூலகம் , வெறும் பாடம் சார்ந்து மட்டும் இருக்க வேண்டுமா? இல்லை பொது நூலகம் போல அனைத்தும் இருக்கவேண்டுமா ? எனக்கேட்டார். வெறும் பாடம் சார்ந்து இருப்பது என்பது எனக்கு உடன்பாடு அல்ல. நல்ல கவிதைகள், சிறுகதை, நாவல், க்ட்டுரை என்று அனைத்தும் இருக்க வேண்டும் என்று பதில் அளித்தேன்.

                        இப்போது இருக்கும் பாடத்திட்டத்தில் ,பிள்ளைகள் மற்ற புத்தகங்களைப் படிப்பதற்கு நேரமிருக்கிறதா, ஆர்வம் இருந்தாலும் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த வீட்டுப்பாடங்களைச்செய்வது என்பதனை எவர் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. தண்டிக்கப்படவேண்டிய ஆள். 'அவனை அழைத்து வந்து,ஆடடா ஆடு என்று ஆடவிட்டுப்பார்த்திருப்பேன் ; என்று கண்ணதாசன் சொன்னது போல, வீட்டுப்பாடம் செய்வதை முதலில் புகுத்திய ஆளைக் கூப்பிட்டு வந்து வீட்டுப்பாடம் செய்ய வைக்கவேண்டும். கொடுமையோ,கொடுமை-வீட்டுப்பாடம் என்ற பெயரில் குழ்ந்தைகளுக்கு. அதுவும் 10,12-ஆம் வகுப்பு என்றால் அத்தனை பாடங்களிலும் அம்புட்டு வீட்டுப்பாடம். பிள்ளைகள் தூங்கணுமா? வேண்டாமா? ஊகூம் எந்தக் கவலையும் இல்லை ஆசிரியர்களுக்கு. 50 பக்கம், 60 பக்கம் எழுதி வா, ஒவ்வொரு பாடத்திலும். என்பதும் , வீட்டுப்பாடம் செய்து வரவில்லை எனில் வகுப்பை விட்டு வெளியில் போ, முட்டிக்கால் போடு என்று முட்டிக்கால் போடவைப்பதும் ....ஆசிரியர்கள் அடிப்பதில்லை, ஆனால் மறைமுகமான வன்முறை, வீட்டுப்பாடம் என்ற பெயரில் இருக்கிறது. ஆனால் இத்தனையையும் மீறி, பிள்ளைகளை மற்ற நூல்களைப் படிக்கவைக்க வேண்டும். நூல்களின் பெருமையை அறியச்செய்ய வேண்டும்.

                  நூலகத்தில்  நூல்களைத் தேடி,தேடி எடுத்து வர வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் ஒரு நாள் முழுவதும் தேடினாலும் நாம் தேடும் நூல் கிடைப்பதில்லை(மதுரை சிம்மக்கல் நூலகம்).. ஏன் நூலகத்திலேயே ஒருவர் என்ன புத்தகம் வேண்டும் என்று கேட்டு அவர்களுக்கு கிடைப்பதற்கு உதவி செய்தால் என்ன? அப்படி ஒரு நியமனத்தை நூலகத்தில் அரசு செய்தால் என்ன? மாணவ, மாணவிகள் அப்படி நூலகத்திற்கு வந்தால் அவர்களுக்கு இது ஒரு வழிகாட்டுதலாக இருக்குமே என்ற கேள்வியோடு கூடிய ஒரு கருத்து-ஆலோசனை கூறப்பட்டது.

              தாராளமாகச்செய்யலாம். இன்னும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, எந்த இடத்தில் புத்தகம் உள்ளது என்பது வரை கணிணியில் ஏற்றப்பட்டு ,கேட்பதை எடுத்துக்கொடுக்கலாம். இந்த இடத்தில் இருக்கிறது, உங்களுக்கு பயன்படும், எடுத்து படித்து வாருங்கள் என இளைஞர்களுக்குச்சொல்லலாம். ஆனால் நூலகத்தைப் பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வு மாணவ,மாணவிகளிடத்தும் இல்லை, அவர்களுக்கு பாடம் எடுக்கும் பெரும்பாலான ஆசிரியர்களிடத்திலும் இல்லை. இதில் மாற்றம் வேண்டும் என்பதனை அரசும் உணரவேண்டும்.மக்களும் உணரவேண்டும்.

1 comment:

anandam said...

நூலகத்தைப் பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வு மாணவ,மாணவிகளிடத்தும் இல்லை, அவர்களுக்கு பாடம் எடுக்கும் பெரும்பாலான ஆசிரியர்களிடத்திலும் இல்லை. இதில் மாற்றம் வேண்டும் என்பதனை அரசும் உணரவேண்டும்.மக்களும் உணரவேண்டும். //படிப்பு என்பது கால் பங்கு வயிற்றுப்பிழைப்புக்கு, மீதி முக்கால் பங்கு அறிவிற்காக ,ஆராய்ச்சிக்காக இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னதை அனைவரும் சிந்தித்து ஏற்றுக் கொள்ள முன் வரவேண்டும். அறிவு - தனிமனிதருக்கு நலமான வாழ்வு தரும்.ஆராய்ச்சி மனித குலத்திற்கே நலமான வாழ்வைத் தரும்.அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அனைவரும் உழைப்போம்...தொடரட்டும் உங்கள் தொண்டறப் பணி.