Saturday 2 November 2013

நிகழ்வும் நினைப்பும் (8) : இசையின்பன் சிறுகதையும் பாராட்டும்:

நிகழ்வும் நினைப்பும் (8) : இசையின்பன் சிறுகதையும் பாராட்டும்:
                                                                                         மாதம் இருமுறை வரும் பகுத்தறிவு இதழான 'உண்மை ' இதழ் இரண்டு நாட்களுக்கு முன்னால், சந்தா கட்டியிருப்பதால் வீட்டிற்கு வந்தது. அந்த இதழைப் படித்தேன் . அதில் இருந்த 'கற்றதனால் ஆன பயன் ' என்னும் சிறுகதையை எழுத்தாளர் இசையின்பன் எழுதியிருந்தார். சிறுகதை என்றாலே எவருக்கும் எளிதில் புரியக்கூடாது,நாலைந்து தடவை படித்தால் கூட எழுதின ஆளுக்கும் புரியக்கூடாது,  , படிக்கிறவனுக்கும் புரியக்கூடாது.  நல்ல கருத்தை ஆழமாகச்சொல்லக்கூடாது .சொன்னால் அது பிரச்சாரக் கதையாக ஆகிவிடும், நவீன சிறுகதையாக இல்லாமல் போய்விடும் என்று சில பித்துக்குளிகள் இலக்கணம் வகுத்துக் கொடுக்க, அப்படி எழுதுவதுதான்  நவீன சிறுகதை என்று நம்மாள் சிலரும் முட்டி,மோதிக்கொண்டிருக்கும் வேலையில், மிக அருமையாக எளிதில் புரியும்வண்ணம், இசையின்பன் அவர்கள் எழுதிய 'கற்றதனால் ஆன பயன் ' என்னும் சிறுகதை இருந்தது. நல்ல கருத்து, சரளமான நடை  என சிறுகதைக்கு உரிய அத்தனை இலக்கணங்களும் பொருந்தியது மட்டுமல்ல. படிப்பவர்களின் மனதை உருக்கும் வண்ணம் எழுதியிருந்தார். இட்டுக்கட்டி அல்ல, இன்றைக்கும் சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் சாதி வேற்றுமையையும், படிப்பதற்காக ஆதி திராவிடர் வீட்டுப் பிள்ளைகள் படுகிற பாட்டையும் எடுத்துக்கூறியது மட்டுமல்ல, இது ஒரு தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் chain reaction என்று சொல்வார்களே , அப்படி ஒரு தொடர் நிகழ்வாக  இருக்கவேண்டும். கற்று உயர்ந்தவர், மேலே வர முயற்சிப்பவருக்கு கற்றுக்கொடுப்பதே , 'கற்றதனால் ஆன பயன் ' என்பதனை அழுத்தம் திருத்தமாக  "அவளைத் தூக்கி யார் காலிலும் விழக்கூடாது என்பதுதான் சுயமரியாதை. அந்தச் சுயமரியாதை உனக்கு வரச் செய்வதற்கு உதவிதான் இந்தப் படிப்பு. இனி உன்னால் எல்லாவற்றையும் நன்றாகக் கற்க முடியும். இயல்பாக உனக்கு உள்ள மூளைத் திறமையும் கற்ற கல்வியறிவும் உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தையும் உண்டுபண்ணும். வருங்காலத்தில் உன் சமுதாய மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்கிக் கைகொடுத்துத் தூக்கிவிடு! அதைத்தான் நான் விரும்புகிறேன் " எனச் சொல்லியிருந்தார்.

                                              இந்தச்சிறுகதையைப் படிப்பவர்களுக்கு, இப்படியெல்லாம் இன்றைக்கும் இருக்கிறதா என்று தோன்றும். இருக்கிறது என்பதுதான் உண்மை. திருமணம் முடித்தவுடன், மனைவி வேலைக்குப்போகக்கூடாது என்பதும், சில கிராமங்களில் படித்தவர்கள் ஆதி திராவிட வீட்டுப்பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்க மறுப்பதும் நடைமுறையில் உள்ள உண்மை. இந்தச்சிறுகதையை படித்தவுடன் , தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களிடம் இசையின்பன் அவர்களின் தொலைபேசி எண் வாங்கி , அலைபேசியில் அழைத்து இசையின்பன் அவர்களிடம் பாராட்டைத் தெரிவித்தேன். நல்ல கருத்து உள்ள சிறுகதை, தெளிந்த நீரோடையாகச்செல்லும் கதை ஓட்டம், சில இடங்களின் மிகவும் நெகிழ வைத்த கதை. படிக்க வாய்ப்புக் கிடைக்காதா, படிப்பின் மூலம் முன்னேற மாட்டோமா  கிராமத்து மாணவ, மாணவிகளின் உணர்வைப் பிரதிபலிக்கும் கதை என்றேன்.இசையின்பன் நெகிழ்ந்தார். அய்யா, இயக்கப்பொறுப்பில் உள்ள உங்களைப் போன்றோர் , படித்து, உடனே அழைத்துப் பாராட்டுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். சிறுகதை வடிவம் நன்றாக உங்களுக்கு வருகின்றது. தொடர்ந்து எழுதுங்கள் என்றேன். நீங்களும் கூட இந்தக் கதையைப் பின்வரும் தொடர்பில் படிக்கலாம் . என்னைப் போலவே உங்களுக்கும் பிடித்தால் அவரைப் பாராட்டலாம்,. வெளியிட்ட உண்மை இதழையும் வாசகர் கடிதம் மூலமோ, இணையம் மூலமோ பாராட்டலாம்.  
http://www.unmaionline.com/new/1749

4 comments:

Unknown said...

சிறப்பு...! வாழ்த்துகள்...!

முனைவர். வா.நேரு said...

ந்ன்றி தோழர்

sundaram.m said...

மதிப்புமிகு தோழர்/அய்யா
தோழர் பிரின்ஸ் என் ஆர் எஸ் முகநூல்மூலம் உங்களைத்தொடர்ந்தேன் .நிகழ்வும் நினைப்பும் : இசையின்பன் சிறுகதையும் பாராட்டும். பாராட்டுரை படித்தேன் .ஒருஆய்வுரையாக அமைந்துள்ளது .அருமை .
ஒரு உதவி -தோழர் இசையின்பன்,தோழர்கள் இறையன் ,திருமகள் இணையரின் புதல்வரா ?அவரது கைபேசி எண்னை(அவரது அனுமதியுடன் )தர இயலுமா ?sundramoorthy.m@gmail.com .இது எனது மின்னஞ்சல் முகவரி .அவரிடம் தேவகோட்டை சுந்தரமூர்த்திஆசிரியர் என்றால் தெரியும் .செய்ய இயன்றால் மகிழ்வேன் .நன்றி .

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழர் .கைபேசி எண் தங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்.