Sunday 20 April 2014

கையில் குழ்ந்தையோடும் கண்களில் வழியும் நீரோடும் ...

கையில் குழந்தையோடும்
கண்களில் ஆறாய்
வழியும் நீரோடும்
தெருத்தெருவாய் வந்தான் அவன் !
ஆண்டுகள் பல
ஆன போதும்
அந்த அழுகைமுகம்
நெஞ்சில் பதிவாய் இன்றும் !

ஏதும் சொல்லவில்லை
அவன் ! எவரிடத்தும்
முறையிடவில்லை !
தனக்கு இழைக்கப்பட்ட
துரோகத்திற்காக
மண்ணை வாரித்
தூற்றினான் என்றார்கள் !

நகையும் சதையுமாய்
தன்னில் ஒருவளாய்
இருந்த ஒருத்தி
தன் உதிரத்திலிருந்து
தன்னைப் போலவே
ஒரு குழுந்தையை
நகலெடுத்துக் கொடுத்த
அந்த ஒருத்தி
செய்த செய்கையால்
செய்வதறியாது
திகைத்துப் போன
அவன்
கையில் குழ்ந்தையோடும்
கண்களில் வழியும்
நீரோடும்
தெருத்தெருவாய் வந்தான் !

அந்தப் பணக்காரரின்
பண்ணையில் அவன்
வேலைக்கு அமர்ந்தபோதே
அருகில் இருந்தவர்கள்
சொன்னார்கள் !
அழகான மனைவி
வைத்திருக்கிறாய் - நீ
அவரிடம் வேலைக்குப்
போகாதே என்று !

அப்படிச்சொன்னவர்களிடம்
அபரிதமான
நம்பிக்கையோடு சொன்னான்
என் மனைவி அனல்
அண்ட முடியாது அவளிடம்
அக்கினியாய் பொசுக்கி
விடுவாள் என்றான்

அக்கினி பன்னீராக மாறி
அடுத்த உடலை
அலங்கரித்தபொழுது
தணலில் விழுந்த
புழுவாய்த் துடித்த அவன்
கையில் குழ்ந்தையோடும்
கண்களில் வழியும் நீரோடும்
தெருத்தெருவாய் வந்தான்
அவன் !

உடம்பில் இருக்கும்
தழும்பு போல
நினைவில் இருக்கும்
தழும்புகளாய்
சில் நினைவுகள் ....
                                     வா. நேரு .....
நன்றி : எழுத்து.காம்

No comments: