Tuesday 10 June 2014

வசூலுக்கு வந்த வண்ணம்...

பெண்கள் நாங்கள்
ஊர் தாண்டி
எல்லை தாண்டி
இருட்டுக்குள்தான்
செல்ல வேண்டியிருக்கிறது !
இயற்கை உந்துதலைக்
கழிப்பதற்கு !

கண்மாய்க்குள்
காட்டுக்குள்
பாம்பு கிடக்குமோ
தேள் கிடக்குமோ
தெரியாத கொடுமையினால்

கிராமத்து ரோடுகளில்
அமர்ந்து
வெளிச்சத்தோடு வரும்
வண்டிகளுக்கு
எழுந்து எழுந்து பின்
அமர்ந்து அமர்ந்து
கழிக்கும் அவலம்
தொடரத்தான் செய்கிறது !


பேருந்து கழிப்பறையோ
ஊருக்குள் இருக்கும்
ஒரே ஒரு கழிப்பறையோ
ஏன் பள்ளிக்கூடத்திற்குள்
இருக்கும் கழிப்பறையோ
மூக்கை பொத்திக்கொண்டுதான்
போகவேண்டியிருக்கிறது !
இதில் சுத்தம் சோறுபோடும்
என்னும் வார்த்தைகள் வேறு !


ஊர் ஊருக்கு
சில பெரியவர்கள்
நோட்டுக்களைத் தூக்கிக்கொண்டு
கோவில் ,கும்பாவிசேகம் என்று
வசூலுக்கு வந்த வண்ணம்
உள்ளனரே !

கிராமத்தில்
தெருவுக்கு மூன்று
கழிப்பறை கட்டுவோம்
அதனை எந்த நாளும்
சுத்தமாக வைத்துக்காட்டுவோம்
அதற்குத் தாருங்கள்
நன்கொடை என வாருங்கள்
பெரியோரே !
                                                    ------: வா. நேரு------
நன்றி : எழுத்து,காம்

------------------------------------------------------------------------------------------------------------

அருமையான பதிவு. அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று. இதை எந்த அரசியல் கட்சிகளோ அரசியவல்வாதிகளோ , பெரும் பணக்கார பெருமக்களோ இதை பற்றி கவலைப்படுவதில்லை. சிந்திப்பதும் இல்லை. எனக்கே 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி மாவட்டத்தில் அலுவல் காரணமாக சென்ற பொது , நிறைய பெண்கள் என்னிடம் கிராம பகுதியில் உள்ளவர்கள் கண்ணீர் மல்க இந்த விடயத்தை சொலும்போது என் நெஞ்சம் வெடித்து.. இதயம் கண்ணீர் சிந்தியது. இது வார்த்தைக்காக , பெருமைக்காக எழுதுவது இல்லை. உண்மை உணர்வை கூறினேன். சில வயதான மூதாட்டிகள் சொல்லும்போதே அழுது விட்டார்கள் .
ஊர் பெயர் நினைவில் இல்லை. லால்குடி தாண்டியவுடன் வரும் அந்த பகுதி. இன்னும் அப்படியேதான் உள்ளது என்று கேள்விப்பட்டவுடன் மனம் நொந்து விட்டேன்.
கோயில்களில் எடுத்து சென்று பணத்தை தெரிந்தும் தெரியாமலும் கொட்டுபவர்கள் , பல வழிகளில் வீண் செய்து விரயம் செய்பவர்கள் தயை செய்து யோசிக்கவேண்டும்.
அடிப்படை வசதி செய்துதராமல் எந்த அரசும் நெடிக கூடாது. ஆனால் இன்று சென்னை மாநகரமே அப்படிதான் உள்ளது. குப்பை கூடாரங்களும் பூட்டிக்கிடக்கும் கழிப்பறைகளும் நெஞ்சை உறுத்துகிறது. யார் யாரை சொல்வது ...  பழனிக்குமார் :

----------------------------------------------------------------------------------------------------------
 




மிகவும் அவசியமான செய்தியைக் குறிப்பிட்டு உள்ளீர்கள் தோழரே.!

ஊர் ஊருக்கு
சில பெரியவர்கள்
நோட்டுக்களைத் தூக்கிக்கொண்டு
கோவில் ,கும்பாவிசேகம் என்று
வசூலுக்கு வந்த வண்ணம்
உள்ளனரே ! "

கடந்தமுறை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ்.கோவில்களைவிட,கழிப்பறைகள்தான் தற்போது அவசியமாக உள்ளது என்று ஒரு கருத்து தெரிவித்தார்.உடனே சில அமைப்புகள் திரண்டு எழுந்து,கோவில்களை விட கழிப்பறைகள்தான் அவசியம் என்று எப்படி சொல்லலாம்..என்று கூறி,அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்,போராட்டம் செய்தது தங்களுக்கும் நினைவிருக்கலாம்.

இந்த விவகாரம் அப்படியிருக்கும்போது,
"
கிராமத்தில்
தெருவுக்கு மூன்று
கழிப்பறை கட்டுவோம்
அதனை எந்த நாளும்
சுத்தமாக வைத்துக்காட்டுவோம்
அதற்குத் தாருங்கள்
நன்கொடை என வாருங்கள்
பெரியோரே !.." - இது நடந்தால் நல்லதுதான்.

மேலும் ,இது தொடர்பாக சமீபத்தில் வந்த செய்தி ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
------------------------------------
"தேவை தூய கழிப்பறை."

இரு இளம்பெண்கள் அந்தி வேளையில் ஊருக்கு வெளியே இயற்கையின் அழைப்புக்காக சென்றபோது வல்லுறவுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அனைத்து கிராமங்களிலும் கழிவறை வசதிகள் இல்லை என்பது குறித்து அனைவராலும் பேசப்படுகிறது.

இதில் அரசை மட்டும் குறைகூறிப் பயனில்லை என்பதையும், மனிதர்களின் பழக்க வழக்கம் எளிதில் மாறுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

2012க்குள் அனைவருக்கும் கழிவறை வசதி உருவாக்கப்படும் என்று திட்டம் தீட்டி ஆண்டுதோறும் 35 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டாலும், இத்திட்டம் 2022ஆம் ஆண்டில்தான் சாத்தியமாகும் என்று தற்போது அரசு சொல்வதற்குக் காரணம்: மக்கள் இதற்குத் தயாராக இல்லை.

இத்திட்டத்தின் கீழ் நாட்டின் பல பகுதிகளிலும் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறைகள் 50% பயன்படுத்தப்படவில்லை. அல்லது பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழாக்கப்பட்டு, சமூக விரோதச் செயல்களுக்கான இடமாக மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு பயன்பாடு இல்லாமல் ஆனதற்குக் கூறப்படும் காரணங்கள், அங்கே தண்ணீர் வசதி இல்லை. இது ஓரளவு உண்மையும்கூட. ஆனால் தண்ணீர் இருக்கும் இடத்திலும், ஆற்றங்கரை மேட்டில் அமைந்துள்ள பொதுக் கழிப்பிடங்கள்கூட பயன்பாடற்றுப் போகக் காரணம் என்ன?

சாலையோர உணவகங்களில் பேருந்துகளை பத்து நிமிடம் நிறுத்துகிறார்கள். நடந்துநர் ஓட்டுநர் இருவர் மட்டும்தான் சாப்பிடுகிறார்கள். பயணிகளில் மிகச் சிலரே சாப்பிடுகின்றனர். அந்த சாலையோர உணவகத்துக்கு வருவாய் எதில் கிடைக்கிறது? கழிவறையில்.

ஒரு பேருந்தில் வருபவர்களில் குறைந்தது 10 பேர் பயன்படுத்துவார்கள் என்றால், குறைந்தபட்சம் 100 பேருந்துகளுக்கு 1000 பேர் பயன்படுத்துகிறார்கள். கட்டணம் நபருக்கு ரூ.4. ஒரு நாளைக்கு எந்த முதலீடும் இல்லாமல் ரூ.4000 கிடைக்கிறது. மாதம் ரூ.1.20 லட்சம்!

ஆனால் அந்தக் கழிவறைகள் முகம் சுழிக்கச்செய்யும் வகையில்தான் பராமரிக்கப்படுகின்றன. அப்படியென்றால், லாபம் இல்லாத பொதுக் கழிப்பறைகளின் பராமரிப்பு எப்படியிருக்கும்!

ஒரு ஓட்டலில் உள்ள பொதுக் கழிப்பறையில் எழுதப்பட்ட வாசகம்: நீங்கள் இந்தக் கழிப்பறை எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதேபோன்று நீங்கள் வெளியே போகும்போதும் சுத்தமாக தண்ணீர் ஊற்றிச் செல்லுங்கள்.

இவ்வாறு எழுதக்காரணம், பலரும் தாங்கள் பயன்படுத்தியதோடு முடிந்தது என்று அக்கறை இல்லாமல் போவதால், அந்தக் கழிப்பறையை அடுத்தவர் பயன்படுத்த முடியாத அளவுக்கு ஆகிவிடுகிறது.

கழிப்பறையைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரியாத இந்தியர்களே அதிகம். இதில் படித்தவர், படிப்பறிவில்லாதவர் என்ற பாகுபாடு கிடையாது.

இவ்வாறு கழிப்பறை குறித்து யாரும் அதிக அக்கறை கொள்வதில்லை என்பதால், இதில் ஊழலும் நாறுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கழிப்பறை வசதி குறித்த தகவல்களுக்கும், மத்திய அரசு கட்டியிருப்பதாக சொல்லும் புள்ளிவிவரத்துக்கும் 3.75 கோடி கழிப்பறைகள் வித்தியாசம் இருக்கிறது. அப்படியானால் இந்த 3.75 கோடி கழிப்பறைகள் கட்டப்படாமல் கணக்கு எழுதப்பட்டனவா?

பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில்தான் பொய்க்கணக்குகள் எழுதப்படுவது வழக்கம். அப்படியிருந்தும் கழிப்பறை இல்லாத பள்ளிகள் இன்னமும் இருக்கின்றன.

பல கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் கழிப்பறை வசதிக்கும் சம்பந்தமே இல்லை. பேருந்து நிலையங்களிலும் இதே நிலைமைதான்! புகழ்பெற்ற பக்தி மணக்கும் கோவில் மதில் சுவர்கள் நாறுகின்றன. வாரச் சந்தை நடைபெறும் பகுதிகள், திருவிழா நடைபெறும் பகுதிகளிலும் முடை வீச்சம்.

சுற்றுச்சூழலால் ஏற்படும் நோய்கள் குறித்து புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை என்று உலக சுற்றுச்சூழல் நாளில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பெரும்பாலான நோய் கழிப்பறை வசதி குறைவாக இருப்பதால்தான் பரவுகின்றன.

இந்தியாவில் நாளொன்றுக்கு 10,000 டன் மலஜலக் கழிவுகள் ஆற்றிலும், வாய்க்காலிலும் கலக்கின்றன. இவற்றில் ஒரு கிராம் மலத்தில் ஒரு கோடி வைரஸ்கள், 10 லட்சம் பாக்டீரியா, 1000 தொற்றுக்கிருமிகள், அவற்றின் முட்டைகள் 100 இருப்பதாகச் சொல்கிறது யூனிசெப் நிறுவனம்.

நோயற்ற இந்தியா உருவாக வேண்டும் என்றால், அனைவருக்கும் தூய்மையான கழிப்பறை வசதி வேண்டும். நோயற்ற வாழ்வும் தூய கழிப்பறையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை!
----------------------இணையத்தின் உதவியுடன் பொள்ளாச்சி அபி

No comments: