Thursday 28 August 2014

இட்லி மாவு.......(சிறுகதை )

                                                         இட்லி மாவு......
                                                                                 -- வா. நேரு
அரைத்தூக்கத்தில் இருந்த அறிவுக்கு இரவே மாசறுபொன் காலையில் இட்லி மாவு வாங்கவேண்டும் என்று சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.படாரென்று படுக்கையில் இருந்து எழுந்து நேரத்தைப்பார்த்தான். நேரம் காலை 5.50. மாசறுபொன்னும் பிள்ளைகளும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களைத் தொந்தரவு செய்யாமல் சைக்கிளை தூக்கி வீட்டிற்கு வெளியே வைத்தான் . இட்லி மாவு வாங்கும் தூக்குச்சட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். இவன் இட்லி மாவு வாங்கும் இடத்திற்கு போவதற்கும் முன்னால் இட்லி மாவு விற்கும் இடங்கள் மூன்று இருக்கின்றன. இவன் வாங்கும் இடத்திற்கும் முன்னாலும் பின்னாலும் இரண்டு பேர் இட்லி மாவு விற்கின்றார்கள். ஆனால் அறிவு வாங்கும் இடத்தில்தான் இட்லி மாவு வாங்கக் கூட்டம் நிற்கும். ஏதோ வெள்ளைக்காரன் கம்பெனி போல காலை 6 மணி முதல் 6.15 வரைக்கும்தான் அந்த இடத்தில் மாவு கிடைக்கும் . அந்த இடத்தில் மாவைக் கொண்டுவருவதற்கு முன்னாலேயே கூட்டம் வரிசையாக நிற்கத்தொடங்கிவிடும். பின் வந்து இங்கு மாவு இல்லை என்பவர்கள் அடுத்த இடங்களில் வாங்குவார்கள் அல்லது திரும்பிப்போவார்கள். அறிவு எப்போதும் இங்கு மாவு இல்லையென்றால் திரும்பிப்போகும் பட்டியலில் இருப்பான். மாசறுபொன் தெளிவாகச்சொல்லியிருந்தாள், ஒன்று வாங்கினாள் அந்த அம்மாவிடம் வாங்கி வாருங்கள், இல்லையென்றால் சும்மா வாருங்கள், நான் வேறு ஏதாவது காலை டிபன் ஏற்பாடு செய்து விடுகிறேன் என்பாள். வேறு டிபன் என்றால் சப்பாத்தி என்றாலும் , பூரி என்றாலும் மாவை எடுத்து ஊறவைத்து, பின்பு பிசைந்து , உருட்டி, தேய்த்து அடுப்பில் எடுத்து போட்டு எடுப்பதற்குள் நேரம் ஓடி விடும். வீட்டில் பிள்ளைகள் இரண்டு பேரும் காலையில் எட்டுமணிக்குள் பள்ளிக்கூடத்திற்கு ஓடவேண்டும். அறிவும் , மாசறுபொன்னும் அலுவலகத்திற்கு அடுத்து ஓடவேண்டும். அதனாலேயே இந்த இட்லி மாவு வாங்குவது ஒரு காலைக் கடமையாகிவிட்டது அறிவுக்கு.

முதன்முதலில் இந்தப் பகுதிக்கு குடி வந்தவுடனேயே வித்தியாசமாக இருந்தது அறிவுக்கு. நிறைய சின்னச்சின்ன கடைகள். காலையிலும், மாலையிலும் சுடச்சுட பணியாரம், வடை என்று ஒரு சிலர். இட்லி கடை சிலர். இடியாப்பம் , புட்டு என்று சிலர் .சமசோ, கீரை வடை என்று சிலர். முள்ளு முருங்கைக் கீரை வடை, எண்ணெய்க்கடலை என்று சிலர். சின்னச்சின்ன இடங்களில், ஒரு நாளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் விற்றுக் கொண்டிருந்தார்கள். முள்ளு முருங்கைக்கீரை வடை எல்லாம் இந்தப்பகுதிக்கு வரும் முன் அறிவு சாப்பிட்டதே இல்லை. இப்போது அந்த வடைப் பிரியர் ஆகிவிட்டான். எல்லோரும் சாதாரண உழைக்கும் மக்கள். நெசவுத்தொழில் செய்து கொண்டிருந்தவர்கள். நெசவுத்தொழில் நலிவடைந்த நிலையில் , ஏதோ சின்னச்சின்ன வேலைகளைச்செய்து தங்கள் வயிற்றுப்பாட்டை போக்கிக்கொண்டிருந்தார்கள் .ஆனால் எல்லோருமே , மகிழ்ச்சியாக தங்கள் வாழ்வை கிடைத்த அளவில் மகிழ்ச்சி என்ற மன நிலையில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார்கள். இட்லி மாவு வாங்கலாம், அல்லது இட்லியாக வாங்கலாம் . நினைத்ததை நினைத்த நேரங்களில் குறைந்த செல்வில் வாங்கிச்சாப்பிட வசதியான பகுதியாக அந்தப் பகுதி இருந்தது, கணவன் , மனைவி இருவரும் வேலைக்குப்போகும் அறிவு குடும்பத்திற்கு மிக வசதியாக இருந்தது.

அதுவும் எஸ்.இராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் ஒரு பெரிய உணவு விடுதிக்குச்சென்று பிள்ளைகளுக்கு எல்லாம் கண்டபடி வாங்கிக்கொடுத்து, பணத்தைக் காலிபண்ணியதைப் பற்றியும் தான் அங்கு இட்லி சாப்பிட்டு வந்ததைப் பற்றியும், இட்லியும் சாம்பாரும் எவ்வளவு நல்ல உணவு என்று விரிவாக எழுதியிருந்தைப் படித்தபின்பு அறிவு சோம்பேறித்தனம் படாமல் காலையில் போய் மாவு வாங்கி வந்து கொடுத்துக்கொண்டிருந்தான்.வீட்டில் இட்லி மாவு சில நேரம் ஆட்டி வைப்பதுண்டு. இப்போது எல்லாம் மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என்று தெரியவில்லை.சில நேரம் பாதி , பாதி மாவை ஆட்டி வைத்துவிட்டு அலுவலகம் ஓடிவந்து விட்டால் மாலையில் போய் அதனை வெளியில்தான் கொட்டவேண்டும். முழுமையாக ஆட்டப்படாத மாவு எதற்கும் பயன்படுவதில்லை. இல்லையென்றால் இரவில் வெகு நேரம் முழித்து மாவை ஆட்டிவைக்க வேண்டும். காலையில் போய் அலுவலகத்தில் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்க வேண்டி வரும். எதற்கடா இந்த வம்பெல்லாம் என்று இட்லி மாவை வாங்கி விடுவான் அறிவு. வீட்டு மாவுக்கும் , அறிவு வாங்கி வரும் இடத்தின் இட்லி மாவுக்கும் ஒன்றும் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது. வீட்டு மாவு போலவே வெளி மாவும் அமைந்தால் வீட்டில் மாவு ஆட்டும் வேளை மிச்சம்தானே ! கொஞ்சம் நாள் பழகப் பழக , மாவு விற்பவர்கள் குடும்பத்தைப் பற்றியும் அறிந்து கொண்டான்.

கணவர், மனைவி, இரண்டு குழந்தைகள்.மூத்த பெண் 6-ம் வகுப்பும் இளைய பெண் 4-ம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தனர். குடும்பமே இட்லி மாவு விற்பனையில் . காலை, மாலை இரண்டு வேளை மட்டும் இட்லி மாவு விற்பனை . முதலில் அம்மா ஒரு பெரிய தண்ணீர் வாளியோடு வருவார். பின்னால் அப்பா சைக்கிளில் மாவு கொண்டு வருவார். அந்த ஆறாவது வகுப்பு படிக்கும் பெண் கையில் கரண்டியோடும் ஒரு சின்ன மாவு வாளியோடும் வருவாள். ஒரு தேர்ந்த சிற்பி போல சில வினாடிகளில் இட்லி மாவு விற்பனை நிலையம் ரெடியாகி விடும். 3 சில்வர் அண்டாக்களில் மாவு இருக்கும் . ஒவ்வொன்றாக சைக்கிளில் கணவர் கொண்டு வருவார். அந்த அம்மா கையில் கரண்டியை எடுத்து மாவைக் கலக்கும் விதமே அருமையாக இருக்கும். அவ்வளவு கவனமாக, நேர்த்தியாக ஒவ்வொரு தூக்கு வாளியோ, சட்டியோ வாடிக்கையாளர்களின் பாத்திரங்களில் மாவு நிரப்பப்படும். ஒரு கப் மாவு 15 ரூபாய்.ஒவ்வொரு கப் மாவிற்கும் ஒரு கரண்டி மாவு போனசாக ஊற்றப்படும் 2 கப் மாவு வாங்கினால் அறிவு குடும்பத்திற்கு ஒரு வேளை உணவு சரியாகிப்போகும். சுடச்சுட இட்லியை மாசறுபொன் அவித்துத்தர , பிள்ளைகள் திருப்தியாக பள்ளிக்கூடம் கிளம்பிவிடுவார்கள். ஆனால் ஒரு அண்டா என்பது ஒரு 30 கப் மாவு பிடிக்கலாம். 3 அண்டா மாவு என்றால் 90 கப் மாவு . ஒரு கப் மாவு 15 என்றால் 90 கப் மாவிற்கு 1350 ரூபாய் . அதில் எப்படியும் 200, 300 ரூபாய் இலாபம் கிடைக்க வழி இருக்கிறது. ஆனால் தரமாக கொடுப்பதனால் இலாபம் குறைவாக இருக்கலாம், ஆனால் உணவுப்பண்டம் வந்தவுடன் பறந்து விடுகின்றதே, ஒரு நாள் கூட மாவு விற்காமல் வெகு நேரம் நின்றதாக அவர்களைப் பார்த்ததேயில்லை அறிவு . இட்லி மாவோ, உணவு விடுதியோ இருக்கும் பொருள் நன்றாக அமைந்து விற்று விட்டால் இலாபம்தானே !, மகிழ்ச்சிதானே.

காலையில் மாவு வாங்கும் இடத்தில் இருக்கும் பிரச்சனை கொசுக்கள்தான். விடிந்தும் விடியாமல் இருக்கும் காலைப்பொழுது. கொசுக்கள் எல்லாம் மொத்தமாகப் படையெடுத்து மொய்க்கும். இரண்டு, மூன்று நிமிடத்தில் நாம் மாவு வாங்கும் நேரத்திற்குள்ளேயே இவ்வளவு கொசு கடிக்கிறதே, கால் மணி நேரம், அரை மணி நேரம் என்று இந்த இடத்தில் நின்று கொண்டே வேலை செய்கின்றார்களே என்று அறிவு யோசிப்பான். சில நாட்கள் சில கொசு வத்திகளை பொருத்தி வைத்திருப்பார்கள். மற்ற நாட்களில் கொசு வத்தி இருக்காது. ஒரு நாள் இரவு முழுவதும் மாற்றி மாற்றி கரண்ட் கட் ஆகிக்கொண்டயிருந்தது. இரவு முழுவதும் தூக்கம் இல்லை. இரவில் இவ்வளவு நேரம் மின்சாரம் இல்லையென்றால் எப்படி மாவு ஆட்டியிருப்பார்கள் - மாவு இன்று இருப்பது சந்தேகம்தான் என்று நினைத்துக்கொண்டு அறிவு போனான். மாவு இருந்தது. மாவு விற்கும் பெண்ணிடமே கேட்டுவிட்டான். "இரவு முழுவதும் மின்சாரம் வந்து, வந்து போனதே ? எப்படி மாவை ஆட்ட முடிந்தது ? " என்று கேட்டபோது, " அண்ணே, இரவு முழுவதும் தூங்கவில்லை, மின்சாரம் நின்றதும், மாவை மூடிவைத்து, பின்பு வந்தவுடன் அரைத்து, மறுபடியும் மூடிவைத்து, பின்பு அரைத்து , இப்படித்தான் அரைத்தோம் " என்று சிரித்துக்கொண்டே அந்தப்பெண் சொன்னபோது அறிவினால் ஏனோ சிரிக்கமுடியவில்லை. வருத்தமாக இருந்தது.

இந்த இட்லி மாவு விற்பனை நிலையத்திற்கு எதிர்த்தாற்போல் ஒரு பெண் தனியாக இட்லி மாவு விற்பனை செய்துகொண்டிருப்பார். காலையில் 6 மணியிலிருந்து காலை 8 , 8.30 வரை ஒரே ஒரு பெரிய சட்டியில் கொண்டுவந்து இட்லி மாவு விற்றுக்கொண்டிருப்பார். ஒரு நாள் எப்போதும் வாங்கும் இடத்தில் இட்லி மாவு இல்லையென்று எதிர்த்தாற்போல் இருக்கும் பெண்ணிடம் மாவு வாங்கிக்கொண்டு போனான் அறிவு. வீட்டில் அடி விழுகாத குறைதான். ஏங்க, மாவு கலர் பார்த்தாலே தெரியலையா, ஏதோ மட்டமான அரிசியிலே அரைச்ச மாவு மாதிரி இருக்கே என்று புலம்பிக்கொண்டே அடுப்பில் இட்லியை வைக்க . சுட்டு வைத்த இட்லியைத் திங்கமுடியாமல் திரு திருன்னு அறிவு முழிக்க, நீங்க இப்படி முழிப்பிங்கே, நாம வாங்கிட்டு வந்த மாவு இட்லியை நாமே திங்கமுடியலையே, பிள்ளைகள் எப்படி திம்பாங்கன்னுதானே முழிக்கிறீங்க, எங்கெளுக்கெல்லாம் வெண்பொங்கல் அப்பவே செஞ்சுட்டேன், போய் குப்பையிலே அந்த இட்லியைக் கொட்டிட்டு, வெண்பொங்கல் சாப்பிட வாங்க என்றாள் மாசறுபொன். அன்றிலிருந்து அந்தப் பக்கம் இட்லி மாவு வாங்குவதையே விட்டுவிட்டான் அறிவு .

ஆனால் இந்தப் பொம்பளைக்கு உறைக்காதா? ஒருவரிடம் வந்த 15 நிமிடத்தில் மூன்று அண்டா இட்லி மாவு எல்லாம் காலியாகிவிடுகிறது நம்மிடத்தில் ஒரு வாளி இருப்பது 2 மணி நேரமானாலும் விற்க மாட்டேங்கதே ! தரம்தானே பிரச்சனை. தரமாக கொடுத்தால் நாமும் கொஞ்சம் நேரத்தில் விற்று விட்டுப்போய்விடலாமே என்று நினைக்க மாட்டார்களா என்று அறிவு நினைப்பான். ஒரு தெருவில் பெரிய நிறுவனத்தின் ஜவுளிக்கடை வந்தால், மற்ற ஜவுளி நிறுவனங்கள் எல்லாம் படுத்துவிடும் .ஏனென்றால் புதிய நிறுவனம் விளம்பரத்திற்கு அள்ளித்தெளிக்கும் பணம். விளம்பரத்தின் மூலம் தன்னை நிலை நிறுத்த மற்ற விற்பனை நிலையங்களைப் படுக்க வைத்துவிடுகின்றார்கள். ஆனால் இங்கு அப்படியில்லையே, தரம்தானே விளம்பரம். மக்கள் இன்று தரமாக இருந்தால் தொலைவில் இருக்கும் இடத்தைக் கூடத் தேடி வருகின்றார்களே என்றெல்லாம் அறிவு நினைத்துக்கொண்டிருந்தான். ஏன் நாமும் அவர்களைப் போலத் தரமாக மாவைக் கொடுக்கக் கூடாது என்று நினைக்கமாட்டார்களா என்று நினைத்தான் . " Satisfied Customer is the best advertiser " - திருப்தியடைந்த வாடிக்கையாளரே மிகப்பெரிய விளம்பரதாரர் என்று தான் படித்த சர்ட்டிபிகேட் -விற்பனையாளர் படிப்பில் படித்தது ஞாபகம் வந்தது அறிவுக்கு .


இரண்டு நாளாய் தொடர்ந்து அறிவு வாங்கும் இட்லி மாவு கடை இல்லை. போய் பார்த்து விட்டு , திரும்பி திரும்பி வந்தான் அறிவு. மூன்றாவது நாள் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தான் ." சார், உங்களுக்குத் தெரியாதா, அந்த இட்லி மாவு விற்கும் பெண்ணிற்கு உடம்பு சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்றார்கள். மேலும் நாலு, ஐந்து நாட்கள் வெளியூர் சென்றதால் இட்லி மாவு விற்கும் பக்கம் போகவில்லை. ஒரு நாள் திடீரென்று எப்போதும் அறிவு இட்லி மாவு வாங்கும் இடத்தில், 8 மணி வரைக்கும் இட்லி மாவு விற்கும் எதிர்த்த இட்லிமாவு கடைப்பெண் உட்கார்ந்திருந்தார். என்ன, இந்த அம்மா உட்கார்ந்திருக்கின்றார்களே, எதிர்த்த இடத்திலிருந்து இந்த இடத்திற்கு ஏன் வந்தார் ? என்று யோசித்துக்கொண்டே அந்தப் பெண்ணிடமே விசாரித்தான். எப்போதும் இங்கு இட்லிமாவு விற்பவர்கள் வரவில்லையா?" என்று கேட்டான் அறிவு. ஒரு மாதிரியாக ஏறிட்டு அறிவைப் பார்த்த அந்தப்பெண் " இனிமேல் அவர்கள் வரமாட்டார்கள், நான் தான் இனி இந்த இடத்தில் இட்லி மாவு விற்பேன் " என்றார். "ஏன் வரமாட்டார்கள் ? " என்றான் அறிவு . "நாலு நாளுக்கு முன்னாடி இந்த இடத்திலே இட்லி மாவு விற்கும் பொம்பளை செத்து போச்சு " என்றவுடன் அறிவுக்கு தூக்கி வாரிப்போட்டது. எப்படி, என்ன என்று விசாரித்த அவன் இறப்பு வீட்டிற்கு விசாரித்துச்சென்றான். அந்த 6-ம் வகுப்பு படிக்கும் பெண் , இவனை அடையாளம் கண்டு கொண்டு அவளது தந்தையிடம் சொல்ல, வெளியில் வந்த அவரிடம் , அவரின் மனைவி இறப்பைப் பற்றி அறிவு விசாரித்தான்.

அழுகையும் கண்ணீருமாய் நடந்த நிகழ்வுகளைச்சொன்னார். நாலைந்து நாளில் எல்லாம் தலை கீழாக மாறிப்யோயிடுச்சு சார். இந்தப்பிள்ளைகளை எப்படி நான் மேலே கரை சேர்க்க? கொசு எப்பவும் கடிக்கிற இடம்தான். சில நாள் கொசுவத்திச்சுருள் எல்லாம் காலையில் பொருத்தி வைப்போம்.எப்படி வந்தது , எதனால் வந்தது என்று தெரியவில்லை. மிகுந்த காய்ச்சல் என்று ஆஸ்பத்திருக்குப்போனாம். டெஸ்ட் எல்லாம் எடுத்து விட்டு டெங்கு காய்ச்சல் என்றார்கள். முத்தி விட்டது, முதலில் வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று சொல்லி டாக்டருகளும் கைவிட்டு விட்டார்கள். பட்டுன்னு போயிட்டாலே சார் இப்படி ? என்று அவர் அழுக, அழுக அறிவுக்கும் அழுகை வந்தது. சேர்ந்து இவனும் அழுதான். அந்த 4-வது படிக்கும் பெண் பக்கத்தில் வந்து அழும் அறிவையே பார்த்துக்கொண்டே இருந்தது. அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு வெளியில் வந்து வீட்டிற்கு வந்த பின்பும் மனது வலித்துக்கொண்டேயிருந்தது. எப்போதும் துயரம் அதிகமாக இருக்கும் நேரங்களில், ஏதேனும் நல்ல புத்தகத்தை எடுத்து வாசிப்பது அறிவின் வழக்கம். மேசை மேல் எப்போதே வாசித்த ராகுல்ஜியின் 'வால்கா முதல் கங்கை வரை " புத்தகம் இருந்தது. எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.

பழங்கால மனிதர்களின் நிச்சயமில்லாத வாழ்வை சுவை பட விவரித்திருந்தார் ராகுல்ஜி. மனிதர்கள் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம். இன்றைய சொத்துக்கள், தனி உடமை, பண்ம போன்றவை இல்லாத காலம். மனிதர்கள் மண்ணை எனது , உனது என்று பிரித்துக்கொள்ளாத காலம். தாய்வழிச்சமூகமாய், பெண்கள் மனிதர்களை வழி நடத்திய காலம். ஒரு தாய் தலைமையில் மொத்தமாய் வேட்டைக்கு போய்விட்டு திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் , திடீரென்று பாய்ந்து வந்த ஓநாய்கள் , குழுவில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைப் பிடித்துக்கொள்ள, அவளை மிருகத்திடமிருந்து காப்பாற்ற முயன்று மீட்கமுடியாத நிலையில், ஓநாய்கள் அந்தப்பெண்ணின் தசைகளை பிச்சு, பிச்சு திண்ண ஆரம்பிக்க, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்த இளம்பெண்ணை அப்படியே விட்டுவிட்டு , குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஓட்டம் ஓட்டமாய் ஓடுவதை சில பக்கங்களில் விவரித்திருந்தார் ராகுல்ஜி. மனக்கண் முன்னால் அந்த நிகழ்வு நிகழ்வதை கற்பனை செய்து பார்த்தான் அறிவு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்கள், இன்றைய நவீன வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் இருந்த மனிதர்கள் , தங்களோடு இருக்கும் ஒரு உயிர் ஓநாய்களிடம் வசப்பட்ட நிலையில் எப்படி தப்பித்து ஓடி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் .ஓநாய்கள் இளம்பெண்ணைக் கொன்று அவளது தசைகளைத் தின்றுகொண்டிருக்க, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அந்த ஓநாய்களிடம் இருந்து தப்பித்து ஓடுவதை, ஒரு சாண் வயிற்றை நிரப்ப படும்பாட்டை விவரித்திருந்தார் ராகுல்ஜி. ஆண்டாண்டு காலமாய் மனிதர்கள் , வயிற்றை நிரப்புவதற்காக படும்பாடு.... அன்றைக்கு காட்டு மிருகங்கள், இன்றைக்கு நாட்டு மிருகங்கள், கொடிய நோய்கள் மனித உயிர்களைப் பறிக்கின்றன என்று நினைத்துக்கொண்டே தூங்கிப் போனான்.

இரண்டு நாளில் மீண்டும் அந்தப் பகுதிக்கு சைக்கிளில் வந்த போது காலை 6 மணி. இறந்த பெண்ணின் கணவர் இட்லி மாவைத் தள்ளிக்கொண்டுவர, அந்தப் பச்சைப் பெண் பிள்ளைகள் இரண்டு பேரும் தண்ணீரும் வாளியும் கொண்டு , அந்த இட்லி மாவு விற்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். இறந்த ஒரு வாரத்திற்குள் மீண்டும் மாவு விற்க வந்து விட்டார்களே என்று எண்ணிக் கொண்டு அருகில் சென்றான். " அண்ணா, எப்போதும் போல எங்களிடம் மாவு வாங்குங்கள் " என்று மழலைக் குரலில் அந்த சின்னப்பெண் கூற, அவளின் அப்பா " எங்களுக்கு இந்தத் தொழிலை விட்டால் வேறு தெரியாது சார். பெரிய சம்பாத்யம் எல்லாம் ஒன்றுமில்லை. காலையில் மாவு , மாலையில் மாவு விற்பதுதான் தொழில். அதில் கிடைப்பதை வைத்துத்தான் அன்றாடம் சாப்பாடு. முந்தி இடைப்பட்ட நேரத்தில் நெய்வோம். இப்போ அந்தத் தொழிலும் நசிஞ்சு போச்சு. நான் சாப்பிடணும், அதுக்கு மேலே இந்தப்பிள்ளைகள் இரண்டும் சாப்பிடணும். மகராசி, எப்படி இட்லி மாவுக் கடையை நடத்துறதுன்னு சொல்லிக்கொடுத்துப் போயிருக்கா, நாங்க தொடர்ந்து இந்த மாவை வித்தாத்தான் வாழ முடியும்.இந்த இடத்தை வேறு யாரும் பிடித்துக்கொண்டால் நான் போய் சண்டை போடுவதெற்கெல்லாம் சத்தும் இல்லை, மனசில் தெம்பும் இல்லை " என்று சொன்னபோது ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை கதைதான் மனதில் ஓடியது. இட்லி மாவு வாங்க இதோ போய் பாத்திரம் எடுத்து வருகின்றேன் என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்தான் அறிவு

                                 *************************************











நன்றி : எழுத்து. காம்.

4 comments:

முனைவர். வா.நேரு said...

வாழ்க்கையெனும் சரித்திரத்தில் இருந்து ஒரு பக்கத்தை எடுத்து வாசிப்பவர் மனதில் தோரணமாய் தொங்க விட்டுவிட்டீர்கள் தோழரே..! மிக யதார்த்தமான கதை எனும் வடிவில் ஒரு சம்பவத்தை நீங்கள் சொல்ல, நேரில் கேட்டது போலவே இருக்கிறது.
இட்லி மாவும், கதையில் ஒரு பாத்திரமாகவே தொடர்வது சிறப்பு.
ஒருவீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்வதின் மூலம்தான் சுய தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்ற நிலை வந்தபிறகு,அவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்கள்,அது குடிசைத் தொழிலோ,நிறுவனமோ..புதியவற்றின் தேவை எவ்வாறு தன்னிச்சையாக உருவாகிறது என்ற இயக்கவியலும் இதில் அமைந்துள்ளது.
விற்பனையாளர்-வாடிக்கையாளர் என்ற உறவு மட்டுமே,நுகர்வுக் கலாச்சாரமாகப் பின்பற்றிப் பழகிவிட்ட தற்போதைய நிலையில்,மாவு விற்கும் பெண் இறந்து போனது குறித்து விசாரிக்கச் செல்லும் அந்த சம்பவம்,இன்னும் மிச்சமிருக்கும் மனித நாகரீகத்தின் அருமையான வெளிப்பாடு..!

வால்காவிலிருந்து கங்கை வரை -ராகுல்ஜியின் எழுத்துக்களை கதையோடு இணைத்து சிந்தித்திருப்பது சிறப்பு. !

அடுத்தடுத்து இன்னும் அழுத்தம் மிக்க சிறுகதைகளை தொடர்ந்து நீங்கள் படைக்கவேண்டும். கருவும் களமும் உங்களுக்காக காத்துக் கிடக்கிறது.!

அன்புடன்
பொள்ளாச்சி அபி.

முனைவர். வா.நேரு said...

கதை எழுத கதைக்கான கருப்பொருளை எங்கும் தேடவேண்டாம் . நம்மை சுற்றியே அன்றாட வாழ்வில் இருக்கிறது என்பதற்காக எடுத்துகாட்டாய் இந்த படைப்பை பார்க்கிறேன்.
நேர்த்தியான கதை. அழகான , அளவான வர்ணனை, சமூகத்திற்கு சொல்லவேண்டிய சிந்தனை, கதாபாத்திரங்களின் பெயர் என்று சகலவிதத்திலும் இந்த கதை எனை கவர்ந்துவிட்டது.

நானும் அறிவை போல மாவு வாங்க கிளம்பலாமா என்று இருக்கிறேன் :)

மிக அருமையான கதை எழுதி, எங்களுக்கு படிக்க கொடுத்தமைக்கு அய்யாவிற்கு நன்றிதான் சொல்லவேண்டும். நன்றி அய்யா !
Santhosh Kumar 1111

முனைவர். வா.நேரு said...

இட்லி மாவை வைத்து அருமையான கதை சொல்லிவிட்டீர்கள் அற்புதம் அய்யா..
Punitha Velanganni

முனைவர். வா.நேரு said...

நன்றாக இருக்கிறது...
யதார்த்தமான நிகழ்வுகள்..இட்லிமாவு ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம். .
'வால்கா முதல் கங்கை வரை' இருப்பது போல் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் தொடர்பு படுத்தி இருப்பது நன்றாக இருக்கிறது...
உடைமைகள் இருந்தாலும்,இல்லை என்றாலும் வயிற்றை நிரப்புவதற்காக படும்பாடு.. தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கும் ....
Vaishu : Nantri Eluthu.Com