Saturday 2 May 2015

அண்மையில் படித்த புத்தகம் : நதியின் கரையில்.....பாவண்ணன்

அண்மையில் படித்த புத்தகம் :  நதியின் கரையில் - கட்டுரைகள்
நூல் ஆசிரியர்                           :  பாவண்ணன்
பதிப்பகம்                                   :  ஏர் இந்தியன் பதிப்பகம் ,சென்னை -600 017               தொலைபேசி : 044-24329283
முதல் பதிப்பு                             :   நவம்பர் 2007, மொத்த பக்கங்கள் 144 விலை ரூ 70
மதுரை மைய நூலக எண்       : 177317




பாவண்ணனின் மொழி எப்போதுமே ஒரு தோழமை மொழி.கண்டதை, கேட்டதை, வியப்புடன்  பகிர்ந்து கொள்ளும் மன நிலையில் இருக்கும் ஒரு குழந்தையின் மொழியாகவும், எல்லாம் துய்த்து , அனுவங்களால் பக்குவப்பட்ட வயதானவர் சொல்லும் மொழியாகவும் இணைந்து இருப்பது பாவண்ணனின் மொழி.நதியின் கரையில் நின்று , ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தை பார்க்கும்போதும் வெறுமனே வரண்டு கிடக்கும் நதியைப் பார்க்கும்போதும் ஏற்படும் மனநிலை போல  எந்த விதமான ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல், கவித்துவ மொழி நடையில் கண்டதையும் , கேட்டதையும் இணைத்து ஒரு நூலாக ஆக்கியிருக்கின்றார்.

நான் மாணவர்களை ஐ.ஏ.எஸ். ஆக்கப்போகின்றேன், ஐ.பி.எஸ். ஆக்கப்போகின்றேன் என்று சொல்லும் ஆசிரியர்களுக்கு மத்தியில் , என்னிடம் படிக்கும் மாணவன் எழுதப்படிக்க கற்றுக்கொண்டால்போதும் , அவன் வாழ்நாள் முழுவதும் எழுதுவதற்கோ, படிப்பதற்கோ இன்னொருவரை எதிர்பார்க்காத அளவிற்கு கற்றுக்கொண்டால்போதும் என்று பாடம் நடத்தும் கோபால் ஆசிரியர்  மனதில் நிற்கின்றார். உயர் படிப்பிற்கு இவர்களில் பெரும்பாலோர் போவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. பெரும்பாலும் 5-ம் வகுப்புத்தான் அவர்களின் உயர் கல்வி. அந்த 5-ஆம் வகுப்பிற்குள் மாணவ-மாணவிகள் எழுதப்படிக்கவேண்டும் என்னும் உணர்வு ஏற்படக்காரணமாக அமைந்த தபால் அலுவலகத்தில் 10-வயதுப்பையன் தனது தாய்க்கு செய்தி எழுதுவதற்காக அலைந்த அலைச்சலும், அந்த நிகழ்வு அந்த ஆசிரியரின் மனதில் பதிந்த பதிவும் , அதனைக் குறிப்பிடும் கட்டுரையான 'கோபால் மேஷ்ட்ரூ ' ம் அருமை.
எனது தாயார் , தனது தாத்தாவான  சாப்டூர் திரு.சிட்டுக்குருவி வெள்ளையப்பன் அவர்கள் சொன்னதாக அடிக்கடி சொல்லுவார். " சமத்தனுக்கும் பணம் வேண்டாம், அபத்தனுக்கும் பணம் வேண்டாம். நாம் சம்பாரிச்சு வைக்காவிடினும் ,சமத்தன் சம்பாரித்துக்கொள்வான். நாம் சம்பாரித்து வைத்தாலும் அபத்தன் அளித்துவிடுவான். ஆனால் எழுதப்படிக்க மட்டும் பிள்ளைகளை வச்சுப்புடனும் " என்று சொல்லிவிட்டு, ஒரு நாளைக்கு 50 மைல் , 60 மைல் தூரம் நடந்ததையும் , கொண்டு போகும் கடித முகவரியை படிக்கத்தெரியாமல் திணறியதையும், படித்தவர் எவர் எவர் எனப்பார்த்து அவர்களிடம் கடிதத்தைக் காட்டி படிக்கச்சொல்லி முகவரி கேட்டு தபாலைச்சேர்த்த கதைகளைச் சொல்லுவார் என்று சொல்வார்கள். கிராமத்தில் பெரிய ஆபிசராக ஆவதற்கு என்று படிக்கவைப்பதில்லை. நாலு எழுத்து, எழுதப்படிக்கத் தெரியணும் என்பதுதான் நோக்கமாக இருக்கும். இன்றைக்கும் கூட எழுத்தறிவு இத்தனை சதவீதம் என்று சொல்கின்றோம் அதில் ,கூட்டி கூட்டி எழுதி  கையெழுத்துப்போடுபவர்களையும் இணைத்துத்தான்.படிக்கும் ஒவ்வொருவனுக்கும் ஒரு நோக்கம் இருப்பது போல கோபால் ஆசிரியருக்கு இருக்கும் நோக்கம் உன்னதமாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

முன்னுரையில் எனி இந்தியன் பதிப்பகம் 'கோபால் ராஜாராம் ' அவர்கள் குறிப்பிட்டு இருப்பதைப்போல் ' தன் வாழ்வில் கட்டுப்பாடுகளை மீறியும் கூட தன்னைச்சுற்றியுள்ளவர்களை குடிக்க வேண்டாம் என்று தடுக்கும் சுப்பக்கா, மனநிலை
சரியில்லாது இருந்தாலும் தன் மீது வக்கிரபுத்திரக்காரன் நடத்தும் வன்முறைக்கு மூர்க்கமாய் எதிர்வினை செய்யும் பெண், ஒரு தனிமனிதனாய் தன் கிராமத்தில் கால்வாய் வெட்டி கிராமத்தின் தலைவிதியை மாற்றிய காம்ப்ளி, கலவரப்பூமியில் கருணையை வெளிப்படுத்தும் முதியவர்கள் என்று மானிடம் இங்கே உயிர் கொண்டு வாழ்கிறது ' என்று குறிப்பிடுவதுபோல மெல்லிய விவரிப்போடு விரியும் நிகழ்வுகளின் தாக்கம் படித்து முடித்த பின்பும் இருப்பதே இந்த நூலின் வெற்றி.


'மலை மீது கட்டிய வீடு' என்னும் கட்டுரையில் வரும்
' மலைமேலே ஒரு வீட்டைக்கட்டிய பின்னர் / விலங்குகளுக்கு அஞ்சினால் எப்படி ஐயா?
 கடற்கரையிலேயே ஒரு வீட்டைக் கட்டிய பின்னர் /அலை நுரைகளுக்கு அஞ்சினால் எப்படி ஐயா ? 
 சந்தை நடுவே ஒரு வீட்டைக் கட்டிய பின்னர் / இரைச்சலுக்கு நாணினால் எப்படி ஐயா ? ....." என்னும் பாடலும்
' முதுமையின் கோரிக்கை' என்னும் கட்டுரையில் வரும் நிக்கி ஜியோவன்னி என்னும் அமெரிக்கக் கறுப்பின் பெண் கவிஞர் எழுதிய கவிதையான
' சாயமிழந்த ஒரு துண்டுத்துணி போல / தோற்றுப்போனவன் நான்/
  உணவுப்பொருட்களாலும் சிரிப்புகளாலும் நிறைந்த / உணவு மேசையில் இனி ஒரு போதும் / எனக்கு இடமில்லை/....' என்பதும்  தொடர்ந்து பாவண்ணன்  மொழிபெயர்த்த முதுமையின் கோரிக்கைகளும் ஆழமாக மனதில் ஊடுருவிகின்றன. துயரத்தில் மூழ்குவது பாவண்ணன் மட்டுமல்ல , வாசிக்கும் நாமும்தான்.


தான் கர்நாடகத்தில் சந்திந்த மரங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். 'நான்கு மரங்கள் ' என்னும் கட்டுரை மரங்கள் பாவணனின் மனதில் இடம் பிடித்த விவரங்களை விவரிக்கும் விதமே தனி அனுபவமாக இருக்கிறது. ' ஒரு துளியைச்சேமிப்பது எப்படி ' என்னும் கேள்வியோடு தொடங்கும் கட்டுரை தத்துவ இயல் போலச்சென்று புத்தரில் முடிகின்றது. ' கசப்பில் கரைந்த இளைஞன் ' சாப்ட்வேரில் பணிபுரியும் இளைஞர்களின் உள்ளத்தைப்புரிந்து கொள்ளத்தூண்டும் கட்டுரையாக இருக்கின்றது.

 ஒரு சிறுமி கொடுத்த ஏழு அதிசயங்கள் என பாவண்ணன் கொடுத்திருக்கும் பட்டியல்
' 1. எதையும் அற்பமாகக் கருதாமல் அக்கம்பக்கக் காட்சிகளை ஆழ்ந்து பார்ப்பது முதல் அதிசயம்.
  2. எங்கெங்கும் நிறைந்திருக்கும் இயற்கையின் இசைக்குச்செவி கொடுப்பது இரண்டாவது அதிசயம்
  3. எவ்வித வேறுபாட்டுணர்வுமில்லாமல் தொட்டுப்பேசுவது மூன்றாவது அதிசயம்
  4. கண்ணால் காண்பதையும் வாழ்வில் நடப்பதையும் ஈடுபாட்டோடு சுவைப்பது நான்காவது அதிசயம் 
  5 . திறந்த மனத்துடன் அனுபவங்களை எதிர்கொண்டு ஒவ்வொன்றையும் உணர்ந்தறிதல் ஐந்தாவது அதிசயம் 
  6. மனத்தில் கள்ளமற்று புன்னகைத்தல் ஆறாவது அதிசயம்
  7. எல்லா உயிர்களிடத்தும் அன்போடிருத்தல் ஏழாவது அதிசயம் '
நம்மையும் அதிசயப்படவைக்கின்றது.

 ' தெரிஞ்ச ஒரு விஷயத்திலிருந்து தெரியாத ஒரு விஷயத்தை நோக்கி சட்டென்று தாவிப்போவ முடிவதுதானே படைப்பு ' என்று ஒரு நண்பர் சொன்னதாகச்சொல்லும் பாவண்ணன் இந்த தொகுப்பில் அதனை முயன்று வெற்றியும் பெற்ற தொகுப்பாக இந்த ' நதியின் கரையில் ' என்னும் கட்டுரைத் தொகுப்பு இருக்கிறது. நல்ல முயற்சி. படிக்கும் எவர் மனதையும் தொடும் படைப்பாக வாழ்வின் நிகழ்வுகளால் பாவண்ணன் படைத்திருக்கும் இந்த படைப்பினை சென்ற மாத வாசிப்போர் களம் கூட்டத்தில் நண்பர் திரு. ஆண்டியப்பன் (JAO ) அவர்கள் அறிமுகப்படுத்தி நூல் அறிமுகம் செய்தார். BSNL நிறுவனத்தில் வேலைபார்க்கும் திரு. பாவண்ணன் , சாகித்ய அகாதெமி பரிசு சிறந்த மொழி பெயர்ப்புக்காகப்பெற்றிருக்கிறார் எனத் தொடங்கி பல்வேறு தகவல்களை பாவண்ணனைப் பற்றிக்கூறினார். படித்தால் எவரும் பாராட்டும்  படைப்பு இந்த ' நதியின் கரையில் '. நீங்களும் படித்துப்பாருங்கள்.


2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அறிமுகத்திற்கு நன்றி ஐயா
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா, வாசிப்பிற்கும், கருத்திற்கும்.