Saturday 30 January 2016

ஜாதி ஒழிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்திய எங்கள் குடும்பம் ......

தருமபுரி ஊமை செயராமன்  - தமிழ்ச்செல்வி குடும்பம் என்பது 
பகுத்தறிவுக் குடும்பம் - பெரியார் கொள்கையால் வெற்றி பெற்ற எங்கள் குடும்பம்
அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இடஒதுக்கீடுபற்றி
பேசியுள்ள மக்களவைத் தலைவர் சுமித்திரா மகாஜன்மீது நடவடிக்கை தேவை
தமிழர் தலைவரின் வாழ்வியல் - சமூகநீதி உரை
தருமபுரி, ஜன. 28 மக்களவைத் தலைவராக இருக்கக் கூடிய பிஜேபியைச் சேர்ந்த சுமித்திரா மகாஜன் - இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், அண்ணல் அம்பேத்கர் கருத்தைத் திரித்துப் பேசியும் இருக்கிறார்  - அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.
தருமபுரி ஊமை செயராமன் - தமிழ்ச்செல்வி குடும்பம் என்பது தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கையை ஏற்றுக் கொண்ட ஜாதி ஒழிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்திய எங்கள் குடும்பம் மற்றவர்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்று மேலும் வாழ்வியல் சிந்தனைக் கருத்துக்களையும் எடுத்துக் கூறினார்.
26.1.2016 அன்று தருமபுரி ஊமை.ஜெயராமன் - தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோரின் பெரியார் - அம்பேத்கர் இல்லத்தினை திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
இரண்டு இல்லங்கள் - பல உள்ளங்களைத் திறக்கக்கூடிய இல்லங்கள்
நடைபெறக்கூடிய இந்த இரண்டு இல்லங்கள் ஒரு புரட்சிகரமான அமைதிப் புரட்சியை திராவிடர் கழகமும் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம் நாட்டிலே நடத்திக் கொண்டிருக்கக்கூடியது என்பதற்கு அடையாளமாக உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த இரண்டு இல்லங்கள் - பல உள்ளங்களைத் திறக்கக்கூடிய இல்லங்கள் என்பதை நான் முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த நிகழ்ச்சி நம்முடைய வாழ்நாளில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி. எனக்கு முன்பாக உரையாற்றிய எங்களுடைய கழகத் துணைத் தலைவர் அவர்கள், வெகுவேகமாக நிறைய செய்திகளைச் சொல்லியிருக்கிறார். நான் அதிக நேரம் பேசவேண்டிய அவசியம் இல்லை.
இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், இது நம் குடும்பத்து நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் மிகப்பெரிய வாய்ப்பு என்னவென்றால், ‘‘பெரியார் - அம்பேத்கர்’’ என்று இந்த இல்லத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். என்மீது இருக்கக்கூடிய அன்பின் காரணமாக ‘தமிழர் தலைவர் வீரமணி இல்லம்’ என்று அவர்கள் பெயர் வைத்திருந்தாலும் அதில் எனக்கு முழு உடன்பாடு கிடையாது. ஆனால், வீரமணி இல்லம் என்றாலும், அது பெரியாரின் இல்லம்தான். பெரியார்தான் வீரமணியினுடைய முகவரி. ஆகவே, அதுவும் பெரியார் இல்லம்தான்; அதுவும் அம்பேத்கர் இல்லம்தான்.
பூஜை அறை முக்கியமல்ல;
புத்தக அறைதான் முக்கியம்!
ஆகவே, பெரியார் - அம்பேத்கர் இல்லம் ஒன்று; பெரியார் - அம்பேத்கர் இல்லம் இரண்டு என்று சொல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். எனவே, இவர்களுடைய இந்த இல்லத்திலும் - எந்த இல்லமாக இருந்தாலும் பழையவர்கள் என்ன செய்வார்கள் என்றால், பூஜை அறை இருக்கிறதா? என்று பார்ப்பார்கள். இது பகுத்தறிவுக் காலம். எனவே, இந்த மேடையில் இருக்கின்ற அறிஞர் பெருமக்கள் எல்லோரையும் வைத்துக்கொண்டு நான் சொல்கிறேன். வீட்டிற்குப் பூஜை அறை முக்கியமல்ல; புத்தக அலமாரிகள் இருக்கக்கூடிய புத்தக அறைதான் மிக முக்கியமானது. அதுதான் அகத்தை புத்தக அகமாக ஆக்கும். ஒரு புது உள்ளத்தை உருவாக்கும், அதுதான் மிக முக்கியமானது.
ஆகவே, நீங்கள் ஒரு நல்ல நூல் நிலையத்தை அமைக்கவேண்டும். நேற்று அரூர் தோழர் ராஜேந்திரன் அவர்களுடைய இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அவருடைய இல்லத்தில் ஒரு பெரிய நூலகத்தை  வைத்திருந்தார். அதனைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் எவ்வளவு பெரிய வீடு கட்டியிருக்கிறார் என்பதை நான் பார்ப்பதைவிட, அந்த இல்லத்தில் அவர் எவ்வளவு நூல்களை வைத்து ஓர் அற்புதமான நூலகத்தை வைத்திருக்கிறார் என்றுதான் பார்த்தேன்.
புத்தகங்கள் பகுத்தறிவு வெளிச்சத்தைக் கொடுக்கும்; மூடநம்பிக்கையை அழிக்கும்!
எனவே, ஒரு வீட்டினுடைய சிறப்பு என்னவென்று பார்த்தால், எவ்வளவு சாமி படங்கள் இருந்தன என்பதல்ல - அது அந்தக் காலம். இன்றைக்குப் பூஜை அறை இருப்பதைக் கண்டு நிறைய பேர் பயப்படுகிறார்கள்; பூஜை அறை வைத்தவர்கள் எல்லாம். எதற்காக என்று உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். வருமான வரித்துறையினர் வந்தால், நேரே பூஜை அறைக்குத்தான் செல்கிறார்கள். அங்கே சென்று பிள்ளையாரை ஒரு உலுக்கு உலுக்கி தோண்டிப் பார்த்தால், அதற்குக் கீழேதான் கருப்புப் பணம் இருந்தது என்கிறார்கள். பிள்ளையார் அதைப் பாதுகாப்பதற்குத்தான் பயன்பட்டிருக்கிறார். ஆனால், இந்தப் புத்தகங்கள் பகுத்தறிவு வெளிச்சத்தைக் கொடுக்கும்; மூடநம்பிக்கையை அழிக்கும்; பெண்ணடிமையைத் தகர்க்கும்; எல்லாருக்கும் எல்லாமும் இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்கும்.
வாழ்வார்களா? வீழ்வார்களா?
இதில் ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றினால், ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பின்பற்றினால், மூடநம்பிக்கை ஒழிப்புக் கொள்கையைப் பின்பற்றினால், பெண்ணடிமை ஒழிப்பைப் பின்பற்றினால், அவர்கள் வாழ்வார்களா? வீழ்வார்களா? என்கிற கேள்விக்கு, வாழ்வார்கள்! வாழ்வார்கள்!! வாழ்வார்கள்!!! என்பதற்கு அடையாளம் இந்த இரண்டு இல்லங்கள்.
எங்களுடைய தோழர், ஜெயராமன், ஊமை.ஜெயராமன், ஊமை ஜெயராமன் என்று மற்றவர்கள் சொல்லும்பொழுது, சிலர் என்னிடம் கேட்டனர், என்னங்க ஊமை.ஜெயராமனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறீர்களே, அவர் எப்படிப் பேசுகிறார் என்று? இல் லீங்க,  அது அவர் தந்தையாருடைய பெயர்; அதன் சுருக்க மாக அவர் இரண்டு எழுத்தில் வைத்திருக்கிறார் என்றேன்.
இங்கே உரையாற்றிய கவிஞர் அவர்கள் சொன்னார், நம்மாட்களுக்கு பெயர் எப்படி வைத்திருக்கிறார் பாருங்கள்; மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்தார்கள். அதற்கு ஒரு காரணத்தையும் சொன்னார்கள், பிறந்த குழந்தையெல்லாம் இறந்து போய்விடுகிறது. மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்தால், இந்த மண்ணில் தங்கும் அதனால்தான் என்று. பிறந்த குழந்தை இறக்காமல் இருப்பது, மருத்துவர்களின் கைகளில்தான் இருக்கிறது.
அதுமட்டுமல்ல, நாங்கள் பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுதே, ஆண்களுக்குப் பெயர் பாவாடை என்று பெயர் வைத்திருந்தார்கள். நல்ல பெயர் வைக்கக்கூடாது என்று மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். மனுதர்மம்தான் இந்து லா.
ஒரு பகுத்தறிவுக் குடும்பத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு எப்படி ஏற்பட்டது - இந்தக் கொள்கையால்தானே!
தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் எதற்காக? இந்த இரண்டு தலைவர்கள் பிறக்காமல் இருந்திருந்தால், நமக்கு இந்த அறிவு தோன்றியிருக்குமா? இந்த இழிவு நீங்கியிருக்குமா? என்பதை அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
நம்மவர்கள் படிக்கக்கூடாது என்று சொன்னார்களே, இன்றைக்கு ஜெயராமன் - தமிழ்ச்செல்வி ஆகியோர் இவ்வளவு பெரிய குடும்பத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு - ஒரு பகுத்தறிவு குடும்பத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு எப்படி ஏற்பட்டது? இந்தக் கொள்கையால்தானே! அவருடைய மச்சான்  மதுரை பாண்டியராஜ் அவர்கள் அருமையாக உரையாற்றினார். அவர் வியாபாரம் செய்பவர், இவ்வளவு விஷயங்களைச் சொல்கிறார் என்றால், அது சாதாரணமானதா?
ஒரு ஜாதியை விட்டு, இன்னொரு ஜாதியில் திருமணம் செய்தால், கத்தியைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்; அரிவாளைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அறிவை பின்னால் வைத்துவிட்டு, அரிவாளை முன்னால் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சமுதாயம் இன்றைக்கு இருக்கின்ற காலத்தில், இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாக, இவர்கள் இரண்டு பேரும் பணியாற்றும்போது காதல் புரிந்து - வாழ்க்கைத் துணைவர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவருடைய மச்சான் அரிவாளை எடுக்கவில்லையே! பாராட்டுப் பத்திரம் அல்லவா படிக்கிறார். ஜெயராமன் அவர்களால் என்னுடைய தங்கைக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தது என்று பெருமையாகச் சொல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் சிலர் சொல்கிறார்கள், கவுரவக் கொலை என்று. கொலை என்பதே மிகவும் அசிங்கமான விஷயம்!
பெரியார் - அம்பேத்கர் இரண்டு பேரும்
உலகத் தலைவர்கள்
எனவே, இது ஒரு பெரிய வாய்ப்பான நேரம். பெரியார் - அம்பேத்கர் இரண்டு பேரும் உலகத் தலைவர்கள். இவர்கள் இரண்டு பேரும் உள்ளூர்த் தலைவர்கள் அல்லர். நிறைய பேர் நினைக்கிறார்கள், அம்பேத்கர் என்றால், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்குத் தலைவர் என்று, அவரை ஒரு சிறிய சிமிழுக்குள் அடைக்கவேண்டும் என்று. அவர் உலகச் சிந்தனையாளர், உலகப் புரட்சியாளர்.
எனவே, அப்பேர்ப்பட்ட புரட்சியாளர்களுடைய பெயர் களில் இப்படிப்பட்ட வாய்ப்பு. நம்மூரில் சொல்வார்கள், ‘‘கல்யாணத்தைப் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்’’ என்று. ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துவிட்டார்கள். அதனால்தான், இந்த வீட்டைக் கட்டிப் பார்த்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது என்று சொன்னார்கள்; படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். இந்த ஒரு குடும்பத்தை மட்டும், பெரியாருடைய இயக்கம், திராவிடர் இயக்கம் - ஏனென்றால், இன்றைக்கு சில அறிவாளிகள் சொல்கிறார்கள், திராவிடத்தால் வீழ்ந்தோம், வீழ்ந்தோம் என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள்.  திராவிடத்தால் ஒருபோதும் விழமாட்டார்கள்; டாஸ்மாக்கினால் வீழ்ந்திருப்பார்களே தவிர, திராவிடத்தால் ஒருபோதும் விழமாட்டார்கள்.
திராவிடத்தால் எழுந்திருக்கிறார்கள். ஊமை.ஜெயராமன் - தமிழ்ச்செல்வி ஆகியோருடைய மகன் டாக்டர் சந்திரபோஸ் அம்பேத்கர் எம்.எஸ்., கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர். அதேபோன்று, டாக்டர் ஆர்.கே.போஸ் (மருமகள்) விஜயா மருத்துவமனையில் டாக்டர். அதேபோன்று மகள் கனிமொழி எம்.பி.பி.எஸ்., மகன் டாக்டர் திராவிடன் அம்பேத்கர் எம்.டி., மும்பையில் இருக்கிறார். டாக்டர் கீர்த்தி (மருமகள்) மும்பையில்.
பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் வெற்றி அடைந்தே தீருவார்கள். அம்பேத்கர் கொள்கையை ஏற்கிறவர்கள் வீழமாட்டார்கள்
இவர்களுடைய திருமணம் ஜாதி மறுப்புத் திருமணம். ஆனால், இவர்களுடைய பிள்ளைகள் இவர்களைவிடத் தாண்டிவிட்டார்கள். இவர்களோ கிராஜுவேஷன் - அவர்கள் பிள்ளைகள் போஸ்ட் கிராஜுவேஷன் மிகப்பெரிய அளவிற்கு. மொழி ஒரு தடையல்ல. எவ்வளவு பெரிய வளர்ச்சி என்று நினைத்துப் பாருங்கள். ஆகவே, இன்னமும் பழையதைத் தூக்கிக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு - அதனைப் பிரச்சாரம் செய்வதற்குத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். இது ஒரு பிரச்சார விழா; வெற்றி விழா! பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் வெற்றி அடைந்தே தீருவார்கள். அம்பேத்கர் கொள்கையை ஏற்கிறவர்கள் வீழமாட்டார்கள் என்பதற்குத் தெளிவான அடையாளம்தான் இந்த விழா.
இரண்டாவதாக இந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கும் பொழுது எந்த இடத்திலேயும் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடவில்லை. நேரம் பார்த்து கடக்கால் தோண்டவில்லை என்பதுதான் மிக முக்கியம். திடீரென்று ஒரு நவீன மூடநம்பிக்கையை உருவாக்கிவிட்டார்கள். அதுதான் வாஸ்து சாஸ்திரம் என்று.
ஒருவன் தேர்தலில் தோற்றுப் போய் மனம் உடைந்து அமர்ந்திருப்பவனிடம் சென்று, நீங்கள் தோற்றுப் போனதற்குக் காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று சொல்கிறார். உடனே அவர் என்ன காரணம் என்று ஆவலோடு கேட்கிறார்.
உங்கள் வீட்டு வாசல்படி இந்தப் பக்கம் இல்லாமல், அந்தப் பக்கமாக இருந்திருக்கவேண்டும். அதனால்தான் நீங்கள் தோற்றுப் போனீர்கள். வாஸ்து சாஸ்திரப்படி இந்த வாசல்படி சரியில்லை. அதனை இடித்திருந்தால், நீங்கள் வெற்றி பெற்றிருப்பீர்கள் என்று சொன்னார்.
வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லி மூடநம்பிக்கையை வீட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார்கள். சாதாரணமாக ஒரு வீடு கட்டினால், ஒரு மூலையில் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடுவார்கள். அந்தப் பூசணிக்காயில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வைத்துவிடுவார்கள்.
அந்தப் பூசணிக்காயை எடுத்து சாலையில் உடைத்து, அதனால் விபத்து ஏற்படுகின்ற வாய்ப்புகள் வரை   மூடநம்பிக்கைகள் வளர்ந்திருக்கின்ற ஒரு காலகட்டம் இது.
அறிவியல் கருவியில்கூட பார்ப்பனியம் புகுந்துவிட்டது
இன்றைக்கு தொலைக்காட்சிகள் எல்லாம்  நம் நாட்டில் ஏதாவது உருப்படியான பணிகளைச் செய்கின்றனவா என்றால், கிடையாது. ஒரு ஊரில் இருக்கின்ற நோயை, உலகம் முழுவதும் பரப்புவதுதான் நம் நாட்டில் தொலைக்காட்சிகள், ஊடகங்களின் பணியாக இருக்கிறது. ஒரு ஊரோடு தொலைந்து போயிருக்கும் மூடநம்பிக்கைகள். ஆனால், அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி, உலகம் முழுவதும் பரப்புவார்கள். ஏனென்றால், மகர விளக்கு என்பதே ஒரு அப்பட்டமான பொய் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறதே - ஆனால், அதை நேரடியாக ஒளிபரப்பி, எல்லா ஊர்களில் இருப்பவர்களும் கன்னத்தில் போட்டுக்கொள்ளும்படி செய்தால், அறிவியல் கருவியை, அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கையை உண்டாக்குவது எப்படி என்பதற்கு - அறிவியல் கருவியில்கூட பார்ப்பனியம் புகுந்துவிட்டது - பழைமை புகுந்துவிட்டது.
எனவே, வாழ்க்கைக்கு பகுத்தறிவு மிகவும் அவசியம். அந்தப் பகுத்தறிவு வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், வரவிற்குட்பட்டு செலவழித்தால், ஒழுக்கமாக வாழ்ந்தால் வளருவார்கள் என்பதற்கு அடையாளமாகும். ஆகவேதான், இவர்கள் வளர்ந்திருக்கிறார்கள். தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தில் பொதுச்செயலாளர். அவர்களுடைய பிள்ளைகள் எல்லோரும் மருத்துவர்கள்.
நீதிக்கட்சி இல்லை என்றால், நம்மவர்கள் மருத்துவர்களாகி இருக்க முடியுமா?
பல மணவிழாவில் நான் சொன்ன செய்தி அதிசய மாக இருந்தது. அது என்னவென்றால், நீதிக்கட்சி இல்லை யென்றால், நம்மவர்கள் மருத்துவர்களாக ஆகியிருக்க முடியுமா? சமஸ்கிருதம் படித்திருந்தால்தான், மருத்துவக் கல்லூரிக்கு மனு போட முடியும். அதனை நீக்கிய பெருமை நீதிக்கட்சியைச் சார்ந்தது - திராவிடர் கழகத்தைச் சார்ந்தது.
சமஸ்கிருதம் படித்தவன்தான் மருத்துவராக முடியும் என்றால், அதற்கு அர்த்தம் என்ன? கீழ்ஜாதிக்காரன் சமஸ் கிருதம் படிக்கக்கூடாது; அப்படியென்றால், மருத்துவர்களாக மேல்ஜாதிக்காரர்கள்தானே பார்ப்பனர்கள்தானே வர முடியும்.  இந்த இயக்கம் இல்லை என்றால், நம்மாட்கள் மருத்துவர்களாக ஆகியிருக்க முடியுமா?
ஒரு காலத்தில் உயர்ந்த ஜாதிக்காரர்கள்தானே வக்கீல் களாக, நீதிபதிகளாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக
இருந்தார்கள் என்பதை யாரேனும் மறுக்கமுடியுமா?
அம்பேத்கர் எழுதிய, ‘‘ஊமையர்களின் குரல்’’
பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். அந்தப் பத்திரிகைக்கு அவர் கொடுத்த தலைப்பு என்னவென்றால், ‘‘ஊமையர்களின் குரல்’’  (மூக்கநாய்க்) என்று வைத்தார். இன்றைக்கு அம்பேத்கரையே ஒன்றுமில்லாமல் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். எதிர்த்து அழிக்க முடியாதவர்களை, அணைத்து அழிப்பது ஆரியத்தினுடைய கலைகளிலேயே உச்சமான கலையாகும்.
நாம் ஏமாந்துவிடக் கூடாது;
எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
முதலில் எதிர்த்துப் பார்த்தார்கள்; முடியவில்லை என்பதும் அணைத்துப் பார்த்தார்கள். இதனை நமக்குச் சொல்லிக் கொடுத்தவர் தந்தை பெரியார். ஆகவே, நாம் ஏமாந்துவிடக் கூடாது; எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இன்னொரு செய்தியைச் சொல்கிறேன். இன் றைய நாளிதழ்களில் வெளிவந்திருக்கிறது. ஒரு நாடாளு மன்றத்தினுடைய சபாநாயகர்; கடந்த ஆட்சிகாலத்தில், ஜெகஜீவன்ராம் அவர்களுடைய மகள் மீராகுமார் அவர்கள் சபாநாயகராக இருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஒரு பி.ஜே.பி.யைச் சார்ந்த, ஆர்.எஸ்.எஸ். அம்மையார் சுமித்ரா மகாஜன் சபாநாயகராக இருக்கிறார். அவர் எவ்வளவு ‘துணிச்சலாகச்’ சொல்கிறார் தெரியுமா?
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின்  அடாவடிப் பேச்சு!
‘‘தற்போதுள்ள இட ஒதுக்கீடு இன்றைய காலகட்டத்தில் நீடிக்கவேண்டுமா? அம்பேத்கர் இட ஒதுக்கீடு தொடர்வதை விரும்பவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு இட ஒதுக்கீடு தொடரக்கூடாது என்று அம்பேத்கர் கூறியுள்ளார். அப்படி தொடரவேண்டுமானால், குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து அதன் பிறகு இட ஒதுக்கீட்டைத் தொடரவேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார். இது அனைவருக்கும் தெரியும்; ஆனால், அவரது இந்தக் கருத்து தற்போது தவறாக மக்களிடையே எடுத்துச் செல்லப் படுகிறது. இன்றுவரை தொடரும் இட ஒதுக்கீடு சமூகத்தில் ஒரு சாராருக்கு இழைக்கப்படும் அநீதியாகவே பலர் கருதுகின்றனர்.
தற்போது 67 ஆவது குடியரசு நாளைக் கொண் டாடு கிறோம். ஆனால், நாடு இன்றளவும் முன்னேற்றமடையாமல் பலவிதத் தடைகளில் சிக்கி உழன்று வருகிறது. தொடரும் இட ஒதுக்கீடும் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருக்கலாம் என்று பெரும்பாலான இளைய சமுதாயத்தினர் நினைக்கின்றனர். பழைய இட ஒதுக்கீட்டு முறையே தொடரும் நிலைக்கு அரசியல்வாதிகளும், பொறுப்பில்லாத மக்கள் இயக்கங்களும் காரணம். இவர்கள்தான் இதற்குப் பொறுப்பேற்கவேண்டும். இன்னும் எத்தனை நாள்தான் இட ஒதுக்கீடு தொடரவேண்டும்?’’ என்கிறார் மக்களவை சபாநாயகர் பிஜேபியைச் சேர்ந்த சுமத்திரா மகாஜன்.
அவர்மீது இம்பீச்மெண்ட் கொண்டுவரவேண்டும். அரசமைப்புச் சட்டத்தையே அவர் படிக்கவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.
மக்களவைத் தலைவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!
இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றவர்களே அதைப்பற்றி தெரியவில்லை. ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன், இன்றைக்கு சாலையில் இவ்வளவு வசதியாகப் பயணம் செய்கிறோமோ, விரைவாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வருகிறோமோ, இவையெல்லாம் எப்படி நடந்தது? எப்பொழுது இதற்கு முன் அப்படி நடந்ததா? கரடு முரடான சாலைகளையெல்லாம் சரி செய்து, தி.மு.க. ஆட்சி காலத்தில், டி.ஆர்.பாலு அவர்கள் மத்திய அமைச்சராக இருந்து இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்ததன் காரணமாகத்தானே விரைவாகப் பயணம் செய்ய முடிகிறது. யாராவது தி.மு.க.வை நினைக்கின்றார்களா? டி.ஆர்.பாலு அவர்களைப்பற்றி நினைக்கிறார்களா? அதுபோன்று சமுதாயத்தில் மிக வேகமாக வரக்கூடிய வாய்ப்புதான் இட ஒதுக்கீடு. சாதாரண குப்பன், சுப்பன் இதை புரியாமல் சொன்னால் பரவாயில்லை; குஜராத்தில் நீதிபதியாக இருக்கின்றவர் சொன்னார், அவர்மீது இம்பீச்மெண்ட் கொண்டு வந்தார்கள். பிறகு அவருடைய கருத்தை மாற்றிக் கொண்டார். இப்பொழுது நாடாளுமன்றத்தில் சபாநாயகராக இருக்கக்கூடிய இந்த அம்மையார் சொல்கிறார். இவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நமக்கொன்றும் அந்த அம்மையார்மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு கிடையாது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது பொலிட்டிக்கல் ரிசர்வேசன்; பொலிட்டிக்கல் ரசிர்வேசன் என்றால், அரசியலுக்கான இட ஒதுக்கீடு. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தனித்தொகுதிக்காக முதலில் 10 ஆண்டுகள் என்கிற வார்த்தையைப் போட்டார்கள்.
கல்விக்கோ அல்லது வேலை வாய்ப்புக்கோ இட ஒதுக்கீட்டிற்கு கால அளவு கிடையாது. இதுதான் அரசமைப்புச் சட்டம். இது ஒரு சபாநாயகராக இருப்பவருக்குப் புரியவில்லை என்றால், என்ன அர்த்தம்?
இட ஒதுக்கீட்டைப்பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்லி, படாதபாடுபட்டார். இப்பொழுது அவரே தலைகீழாக மாற்றிச் சொல்லும்பொழுது,
இப்பொழுது நாடாளுமன்ற சபாநாயகர் இப்படி பேசியிருக்கிறார்; அதுவும் அம்பேத்கர் சொல்லியதாகச் சொல்கிறார். இது எவ்வளவு பெரிய  மோசடி என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
நாம் வளர்ந்தால் மட்டும் போதாது; நம்முடைய சமுதாயத்தில்  உள்ளவர்களையும் கைதூக்கி விடவேண்டும்
எனவேதான், நாம் விழிப்போடு இருக்கவேண்டும். படித்த வர்கள், நாம் வளர்ந்துவிட்டோம் என்று நினைக்கக்கூடாது. இன்னொரு விஷயம், பாராட்டவேண்டிய விஷயம், அவருடைய வீட்டைப் பற்றி சொன்னார்கள், எல்லோரையும் அவர்கள் தயார் செய்தார்கள் என்று. இல்லறம் நடத்துவது மட்டும் முக்கியமல்ல; தொண்டறம் மிக முக்கியம்.
நாம் வளர்ந்தால் மட்டும் போதாது; நம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்களையும் கைதூக்கி விடவேண்டும்; அப்படி கைதூக்கி விட முடியாதவர்கள், தயவு செய்து யாருடைய காலைப் பிடித்து இழுக்காமல் இருங்கள். நம் சமுதாயத்தில், கைதூக்கி விடுகிறவர்களைவிட, காலைப் பிடித்து இழுக்கின்றவர்கள்தான் அதிகம். நான் வந்துவிட்டேன், எனக்கு நிகராக அவன் அறிவாளியாக வரக்கூடாது என்று.
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது - குறள் 68
என்கிறார் திருவள்ளுவர்.
ஓர் அற்புதமான பகுத்தறிவு குடும்பம்;
பெரியார் குடும்பம்!
ஆகவே, இந்தக் குடும்பம் ஒரு அற்புதமான பகுத்தறிவுக் குடும்பம்; பெரியார் குடும்பம்; ஜாதியை ஒழித்த குடும்பம்; கல்வியைப் பெற்றுக்கொண்டால், ஜாதி ஒழியும் என்பதற்கு அடையாளமாக ஜாதி மறுப்புத் திருமணம் செய்து, இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் வளர்ந்திருக்கிறார்கள். இவர்களைப் பின்பற்றுங்கள். நீங்களும் இதுபோன்று வளர்ச்சியடையலாம் என்று கூறி முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
நன்றி : விடுதலை 28.01.2016


No comments: