Monday 6 June 2016

கசப்பாகத்தான் இருந்திருக்கிறது.....

                                                  கடந்து போன காலங்கள்(5)


கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
என உலக நாத்திக
மாநாடுகளில் உரையாற்றும்
நான்
நாத்திகக் குடும்பத்தில்
வந்தவனல்ல....

எனது அம்மா
பின்னாளில் நாத்திகர்
என்றாலும் எனது
அப்பா நாத்திகர் அல்ல....

ஆண்டவன் மேல் அதிபக்தி
கொண்டதால் 'ஆண்டவர்'
எனப் பெயர் பெற்ற
அப்பாவின் பிள்ளை நான்...

சிறுவயதில் புரட்டாசி
மாதங்களில்
சக்திவேல் வாத்தியாரின்
பஜனைக் கோஷ்டியோடு
ஒன்றிணைந்து நானும்
'கோவிந்தா '  முழக்கம்
போட்டிருக்கிறேன்

சனிக்கிழமை ஊரைச்சுற்றி
வந்து பின்பு
உட்கார்ந்து சாப்பிடும்
பொங்கல் இட்லிகளை
நானும் கூட
சாப்பிட்டிருக்கிறேன் .....

ஆனால் விவரம்
தெரிந்த காலத்திலிருந்து
'க்டவுள் ' எனும் பெயரே
கசப்பாகத்தான் இருந்திருக்கிறது.....

சர்வ சக்தி சாமி
என்று சொல்லப்படும்
'சதுரகிரி' மலை அடிவாரத்தில்
சாமி கும்பிடப்போன இடத்தில்
எனது அக்கா மகன்
பொன்னுக்காளை 'கை' போனதால்
ஏழாம் வகுப்பு படிக்கும்போதே
என்னடா கடவுள் இது
கும்பிட வந்தவனையே
காப்பாற்ற வக்கில்லாத
க்டவுள் எனத்தோன்றியது......

கடவுளை விடாது
கும்பிடும் ஒருவர்
சாட்டையால் சகமனிதரை
விடாது அடிப்பதையும்
அடிவாங்கிய மனிதர்
அத்தனை அடியையும்
வாங்கிக்கொண்டு
அழுது அழுது புரண்டாரே தவிர
ஒரு வார்த்தை கூட
அடித்தவரை
எதிர்த்துப்பேசாமையும்
பள்ளிக்குச்செல்லும்
வழியில் பார்த்த
எனக்குள் விதைத்த
இராசயனங்கள் பல பல.....

                                                            வா.நேரு  07.06.16




No comments: