Wednesday 8 June 2016

எருமைக் காலங்கள்.......

                                                 கடந்து போன காலங்கள்(6)

       
படிக்கும் காலங்களில்
அதிகாலைப் பயணங்கள்
பெரும்பாலும்
எருமை மாட்டின் மேல்தான்....
இளம் வயதில்
எருமை மாட்டுச்சவாரிதான்
ஏரோப்பிளான் சவாரிபோல,,,,

சின்ன எருமை பெரிய எருமை
நடு எருமை என
மூன்று எருமைகள் இருந்தன
எங்கள் வீட்டில் .....

ஏதேனும் ஒரு மாடு
பால் கறக்கும் நிலையில்...
ஆபத்துக்காலங்களில்
அட்சய பாத்திரம் அவைகள்தான்
'மூக்கையா' அண்ணன்
பால்பண்ணையில்
எப்போது கேட்டாலும்
முன் பணம் கிடைக்கும்
பாலை ஊற்றி பின்பு
கடனை அடைக்கலாம்...

என் காலில் பெரிய எருமை
ஒருமுறை தன் காலைத்
தூக்கி வைத்து விட்டது !
ஆனந்தமாய் அசை போட்டுக்கொண்டு
பெரிய எருமை அசையாமல் நிற்க
நானோ வலியில் துடிக்க
அடித்தாலும் அசையாத எருமை..
காலை எடுக்க வைப்பதற்குள்
போதும் போதும் என்றாகிவிட்டது....

அதிகாலை எழுந்து
மாட்டின் சாணி அள்ளி
அதிகாலையில் மாடுகள்
மூன்றையும் ஓட்டிக்கொண்டு
வயல்களில் மேயவிட்டு
மாடுகள் மேயும் நேரத்திற்குள்
குளித்து துவைத்து
தயாராகி
வீட்டில் வந்து மாடுகளைக்
குளுதாடியில் தவிட்டைப் போட்டு
தண்ணீர் குடிக்கவிட்டு
கடலைக் கொடி அல்லது
கூளத்தை அள்ளிப்போட்டு


அம்மா ஆக்கி வைத்திருக்கும்
சோற்றையும் பருப்பையும்
அவசரமாய் என் வாயில்
அள்ளிப்போட்டு
பள்ளிக்கூடத்திற்கு  ஓடி
9 மணி முதல் 1 மணிவரை
வகுப்பிற்குள் அமர்ந்துவிட்டு

1 மணிக்கு வீட்டிற்கு வந்து
மாட்டிற்கு தண்ணீர் வைத்து
பாலைக் கறந்து ஊத்தி
மீதம் நுரையோடு இருக்கும்
பச்சை எருமைப்பாலை
வாயினில் அப்படியே ஊற்றிவிட்டு
இரண்டு மணிக்கு
மீண்டும் பள்ளிக்கு ஓடி

பின்பு 5 மணிக்கு வீட்டிற்கு
வந்து படித்து
வீட்டில் இருக்கும்
மாட்டைப் பார்த்து
வீட்டு வேலைகளையும்
பார்த்ததோடு
படிப்பையும் சேர்த்து
படித்த காலங்கள் .....

பள்ளிக்கும் வீட்டிற்கும்
ஏறத்தாழ ஒரு மைல் இருக்கும்
ஒரு நாளைக்கு
எத்தனை மைல்கள்
ஓட்டமும் நடையமுமாய்....

வயிற்றுக்கும்
அறிவுக்குமாய்
ஓடி ஓடி
உழைத்த காலங்கள்!...

                                                    வா.நேரு ...09.06.2016



No comments: