Thursday 26 January 2017

உலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார்?......

உலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார்?
  • 45 நிமிடங்களுக்கு முன்னர்
உலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார்? என்பது குறித்த ஐநாவின் குழந்தைகளுக்கான யுனிசெஃப் அமைப்பின் அறிக்கையில் அதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன
http://www.bbc.com/tamil/global-38759521
உலகின் மிக அதிகமான மகிழ்ச்சியான குழந்தைகள் யார் ? என்னும் கேள்வியை எழுப்பி அதற்கு விடையைக் கொடுத்திருக்கின்றார்கள். அந்த ஒலியும்,ஒளியும் காட்சியைப் பி.பி.சி.யில் பார்த்தபொழுது என் குழந்தைகள் சொ.நே.அன்புமணியும், சொ.நே.அறிவுமதியும் மதுரையில் படித்த ' தாய்த் தமிழ்ப் பள்ளி' நினைவிற்கு வந்தது. எல்.கே.ஜி., யு.கே.ஜி என்பதற்குப் பதிலாக 'மொட்டு வகுப்பு ' என்றும் 'மலர் வகுப்பு ' என்றும் பெயர் வைத்து அந்தப் பள்ளியை நடத்தினார்கள்.அவ்வளவு மகிழ்ச்சியாக எனது குழந்தைகள் அப்போது  வகுப்பிற்குச்செல்வார்கள். தாய்மொழியான தமிழை முதன்மைப் படுத்தினார்கள், ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுத்தார்கள். அந்த அடித்தளம் இன்றைக்கு கல்லூரியில் படிக்கும் இருவருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது. வீட்டிலிருந்து நிறைய காய்கறிகளை உணவாகக் கொண்டுவரவேண்டும், அதனை குழுவாக உட்கார்ந்து பகிர்ந்து சாப்பிட வேண்டும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவு கொண்டுவரவேண்டும்(மரபு சார்ந்த உணவுகள்) என்பதனை நடைமுறைப்படுத்தினார்கள். வீட்டுப்பாடங்கள் என்பது மிக, மிகக் குறைவாகவே இருந்தது. நிறைய விளையாட்டுடன் கூடிய கல்வியைக் கற்றுக்கொடுத்தார்கள். . டை எல்லாம் கட்டாமல், பூட்ஸ் போன்றவைகள் போடாமல் பள்ளிகளுக்கு சென்றுவந்தார்கள். அப்பா, அம்மாவை டாடி ,மம்மி என்றெல்லாம் கூப்பிடக்கூடாது என்று அப்போதே கற்றுக்கொடுத்தார்கள் . எங்கள் பிள்ளைகள் பெற்றோர்களை எந்தக் காலத்திலும் மம்மி, டாடி என்று அழைத்ததில்லை, அதற்குக் காரணம் அந்த வயதில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கல்வி.தாய்த்தமிழ் பள்ளியில் பணியாற்றியவர்களுக்கு பெரிய அளவிற்கெல்லாம் ஒன்றும் சம்பளம் கொடுக்கவில்லை(மாணவ,மாணவிகளிடம் மிகக்குறைந்த கட்டணம்தான் வசூலித்தார்கள்),வேலை பார்த்த ஒவ்வொரு ஆசிரியரும் அப்படி ஒரு உணர்வுள்ளவர்களாக, பிள்ளைகள் மேல் அன்பு காட்டக்கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் உறவுகளில் பலர் இப்படி தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பியதில் மிகப்பெரிய எதிர்ப்பைக் காட்டினார்கள். இன்றைக்கு கல்லூரி பாடப்புத்தகங்கள் தாண்டி தமிழில் நிறையப் புத்தகங்களை எனது பிள்ளைகள் வாசிக்கின்றார்கள், சில புத்தகங்கள் பற்றி விவாதிக்கின்றார்கள்.  வீட்டில் இருக்கும் , நூலகத்தில் இருந்து எடுத்துவரும் புத்தகங்களை எல்லாம் அவர்கள் விரும்பி படிப்பதற்கு வாய்ப்பாக அவர்களின் மொட்டு வகுப்பு, மலர் வகுப்பு பயிற்சி அடிப்படையாக இருக்கிறது. திராவிடர்களாகிய தமிழர்களின் பண்பாடு, தமிழர் வீரம், தமிழர் உணவு முறை, வெளி நாட்டு உணவு, குளிர்பானங்கள் விலக்கு போன்ற பல செய்திகள் பேசப்படும் நிலையில் எல்,கே,ஜி.,யூ.கே.ஜி வகுப்புகளில் தாய்மொழியாக தமிழ் முக்கியத்துவம் பெறுவதும், தொடர்பு மொழியாக மட்டும் சில வகுப்புகள் மட்டும் ஆங்கிலத்திற்கு ஒதுக்குவதும் ,வீட்டுப்பாடங்களே இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை தமிழகத்தில் ஆக்குவதும் , மதம் சார்ந்து பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திணிக்காமல் அவர்களுக்கு குறிப்பிட்ட வயதை அடைந்தபிறகு தேவைப்பட்டால் அவர்கள் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதும் , எதிர்காலத்தில் உலகின் மிக அதிகமான மகிழ்ச்சியான குழந்தைகள் தமிழ்க்குழந்தைகள் எனச்சொல்வதற்கு வழி வகுக்கும் என்பது எனது எண்ணம்.   

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதிவு. நன்றி.

வைசாலி செல்வம் said...

ஆஹா அருமை ஐயா.

முனைவர். வா.நேரு said...

வணக்கம். நன்றி, வருகைக்கும் கருத்திற்கும்

திண்டுக்கல் தனபாலன் said...

மகிழ்ச்சி ஐயா...

முனைவர். வா.நேரு said...

அய்யா, நன்றி

ஸ்ரீராம். said...

மொட்டு வகுப்பு, மலர் வகுப்பு .... ஆஹா...

முனைவர். வா.நேரு said...

நன்றி...