Sunday 12 March 2017

தம்பட்டம் அடித்துக் கொள்ளும்.......

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை  வருமாறு:

உத்தரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் நேற்று (11.3.2017) வெளிவந்துள்ளன.

பா.ஜ.க.வுக்கு இது பெரு வெற்றி - மோடியின் தலைமைக்குக் கிடைத்த சிறப்பு என்றெல்லாம் பத்திரிகை உலகமும், ஊடகங்களும், பா.ஜ.க.வும், அதன் சுற்றுக் கிரகங்களும் கூறித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும்.

ஆனால், விருப்பு வெறுப்பற்ற பொது நிலையில் (ளிதீழீமீநீtவீஸ்மீ) இந்தத் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தால், கீழ்க்கண்ட காரணங்கள்தான் பிரதான வெற்றிக்கானவை என்பது புரியும்.

ஆளும் கட்சிகளுக்கு எதிராக....

1. ஆளுங்கட்சி - அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி - எதிர்ப்பு - 5 மாநில முடிவுகளும் - Anti-incumbency.

(அ) உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லை

(ஆ) ஆளுங்கட்சிக்குள் அப்பா - பிள்ளை சண்டை தெருவில் அடிதடி வரை வந்து சிரித்தது.

(இ) திட்டமிட்ட பா.ஜ.க. - அமித்ஷா - மோடி இருவரின் வியூகமும், உழைப்பும் குறிப்பிடத்தகுந்தவை.

(ஈ) உத்திரகாண்ட்டிலும் ஆளும் காங்கிரஸ்மீது அதிருப்தி

(உ) பஞ்சாபில் அகாலிதள (குடும்ப) ஆட்சியின்மீது அதிருப்தி - எதிர்ப்பு.

(ஊ) கோவாவிலும் பா.ஜ.க. ஆட்சிமீது வெறுப்பு - அக்கட்சி பிளவுபட்டது!

மாயாவதி செய்த தவறு

(எ) மாயாவதி தன் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களை அரவணைக்காது விரட்டியது.

(ஏ) இஸ்லாமியர்களின் வாக்கு ஒருங்கிணைந்து எந்தக் கட்சிக்கும் செல்லாதது!

(அய்) மோடியின் பகிரங்க ஹிந்துத்துவா ஆதரவுப் பேச்சு - தீபாவளிக்கு தடையில்லா மின்சாரம் கிடையாது; ஆனால், ரம்ஜானுக்கு மட்டும் உண்டு என்பது போன்ற பேச்சுகளால் உரு வாக்கிய ஓர் முனைப்படுத்திய (Polaraize) தன்மை!

மத உணர்வைப் பயன்படுத்திவிட்டு, இப்போது மதத்தின் வெற்றி அல்ல என்று அமித்ஷா கூறுவது ‘‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்பதுபோல - அசல் கேலிக்கூத்து!

2014 மக்களவை தேர்தலைப் போல் இம்முறை மோடி அலை பயன் தராது என்ற நிலையில், உத்தரபிரதேச மாநில பாஜக தலைவராக கேசவ் பிரசாத் மவுரியாவை நியமித்தது; பார்ப்பனர்கள் மற்றும் ஒட்டுமொத்த உயர்ஜாதியினரின் வாக்குகள் பாஜகவிற்கு வருவது உறுதியானது.

உ.பியில் 19 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள், தாக்கூர் போன்ற உயர் ஜாதியினர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது உறுதியானதும், யாதவர் அல்லாத, ஜாட் இனத்தவர் அல்லாத 170 பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை களமிறக்கியது. இதனால் யாதவர் இன வாக்குகளைத் தவிர்த்து மற்ற பிற்படுத்தப் பட்ட மக்களின் வாக்கு வங்கியானது முழுமையாக பாஜகவின் பக்கம் சென்றது.

பாஜக உத்தரப்பிரதேசத்தில் அப்னாதள் மற்றும் சுஹேல்தவ் பாரதிய சமாஜ் கட்சி ஆகிய சிறு கட்சிகளோடு கூட்டணி வைத்திருந்தது.  பூர்வாஞ்சல் மற்றும் மத்திய உத்தரபிரதேசத்தில் கணிசமான பட்டேல் குர்மி இன மக்கள் உள்ளனர். அப்னா தள் அவர்கள் ஆதரவு பெற்ற கட்சி. சுஹேல்தவ் கட்சிக்கு, 18 சதவீத மக்கள் தொகையை கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ராஜ்பர் ஜாதி மக்கள் ஆதரவு இருந்தது. பிரச்சாரத்தின்போது தாக்கூர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ராஜ்நாத்சிங்கும், பார்ப்பனர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கல்ராஜ் மிஷ்ராவும் பிரச்சாரம் செய்தனர்.

மாற்றுக் கட்சித் தலைவர்களை இழுப்பது...

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பிரஜேஷ் பதக், ஸ்வாமி பிரசாத் மவுரியா மற்றும் ஆர்.கே.மவுரியா போன்ற முக்கிய தலைவர்களை பாஜக தன்பக்கம் இழுத்து, பகுஜன்சமாஜ் கட்சியின் அடுத்த நிலை தலைவர்களே இல்லாமல் செய்தது. காங்கிரஸ் கட்சியின் உ.பி மாநில முன்னாள் தலைவர் ரிதா பகுகுணாவையும் பாஜக விலைக்கு வாங்கியது; எந்த பகுதிகளில் கட்சி பலகீனமாக இருந்ததோ, அங்கு பிற கட்சிகளை சேர்ந்த பலமிக்க தலைவர்களை விலைக்கு வாங்கியது

2015 ஆம் ஆண்டிலேயே இது தொடங்கப்பட்டதை அப் பொழுது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளிப்படுத்தியதே!

அதிகமான அளவு தீவிர இந்துமத உணர்வு கொண்ட மக்களின் வாக்குகளைப் பெற இஸ்லாமியர்கள் யாருக்கும் இடம் கொடுக்கவில்லை. அதே போல்  மோடியும், அமித்ஷாவும் இந்துக் களை முஸ்லிம்களுக்கு எதிராக திரள செய்யும் வகையிலான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ரம்ஜானுக்கு இலவச மின் சாரம் அளிக்கப்படுகிறது; அதேநேரத்தில் தீபாவளிக்கு அளிக்கப்படவில்லை என்றார் மோடி. பாகிஸ்தான் தீவிரவாத கசாப்பிடமிருந்து உ.பி. விடுதலை பெற வேண்டும். கசாப் என்றால் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் முதல் எழுத்துக்களை வைத்து சொல்கிறேன். வேறொன்றும் இல்லை என்றார் அமித்ஷா.

திடீர் என்று முளைத்த கூட்டணி

சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி இருந்தாலும் திடீர் என்று முளைத்த கூட்டணி ஆகையால் சமாஜ்வாடி தொண்டர்கள். இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. சில தொகுதிகளில் சமாஜ்வாடி வெற்றி பெற வாய்ப்பிருந்தது.அதை காங்கிரசுக்கு ஒதுக்கியதால் உள்ளூர் நிர்வாகிகள் காங்கிரசை எதிர்த்து வேலை பார்த்தனர். ஆட்சிக்கு எதிரான அலையும் ஒரு காரணம்.

தந்தை மகனே கட்சிக்காக சண்டை போட்டதால் ஆட்சி மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது.

பீகாரைப் போலவே உ.பியில் முதல்வர் யார் என்பதை அறிவிக்காமல் பாஜக தப்பு செய்துவிட்டதாக விமர்சகர்கள் கூறினர். ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என கூறாமல் தேர்தலை சந்தித்தது பாஜகவுக்கு ஒரு வகையில் வசதியாகிவிட்டது. ஏனெனில் பாஜக நம்பிய அனைத்து ஜாதியினருமே பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். முதல்வர் வேட்பாளராக யாரையாவது அறிவித்திருந்தால் இதர ஜாதியினரின் வாக்குகளை பாஜக இழந்திருக்கும்.

அதிகார பலம் - ஊடக பலம்

மத்திய அரசின் அதிகார பலம் ஊடக பலங்கள் இன்னொரு பக்கம்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இரண்டும் தனித்தனியாக நின்றதால் இஸ்லாமியர் மற்றும் தலித்துகளின் வாக்குகளும், முற்றிலும் சிதறிவிட்டன; பாஜகவின் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்றே போடப்பட்ட வாக்குகள் பா.ஜ.க. பக்கம் விழுந்தன.

மத்திய ஆட்சியின் கொள்கை முடிவுகளுக்கு இது வரவேற்பல்ல.

இந்த முடிவுகள்மூலம் மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் கூடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஒருபுறம்; குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்போது, பா.ஜ.க. வேட்பாளருக்கு இது பெரிதும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெற்றி பெற்ற அத்துணைக் கட்சிக்காரர்களுக்கும் நமது வாழ்த்துகள்!

அதிகார ஆணவம் - பதவியை குடும்பச் சண்டைக்குப் பயன்படுத்தினால் நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள் என்ற பாடத்தையும் இம்முடிவுகள் உணர்த்துகின்றன!



கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

12.3.2017
சென்னை



Read more: http://viduthalai.in/page1/139488.html#ixzz4b6i1Gxwa

No comments: