Monday 16 October 2017

அண்மையில் படித்த புத்தகம் : கொத்தைப் பருத்தி (சிறுகதைத் தொகுப்பு)......கி.ராஜநாராயணன்

அண்மையில் படித்த புத்தகம் : கொத்தைப் பருத்தி (சிறுகதைத் தொகுப்பு)
நூல் ஆசிரியர்               : கி.ராஜநாராயணன்
இரண்டாம் பதிப்பு            : அக்டோபர் 2011
வெளியீடு                   : அன்னம், தஞ்சாவூர்-7 விலை ரூ 75/
மதுரை மைய நூலக எண்    : 192811

                                   கரிசல் மண்ணை தனது எழுத்தால் எப்போதும் நம் கண் முன்னே கொண்டுவரும் கி.ரா.வின் எழுத்துக்களை வாசிப்பது எப்போதுமே ஒரு சுகமளிக்கும் வாசிப்பு அனுபவம்.எழுத்தில் இழையோடும் நகைச்சுவையும், எள்ளலும் எகத்தாளமுமாக பேசிக்கொள்ளும் அவரது பாத்திரப்படைப்புகளும், அவர்களின் வட்டார வழக்கு பேச்சுக்களும் வாசிப்பவர்களை எப்போதுமே ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவை. அப்படித்தான் இந்தத் தொகுப்பில் உள்ள 14 சிறுகதைகளும்.

                              முதல் சிறுகதை 'கொத்தைப் பருத்தி ' மாறிப்போன மக்களின் மனநிலையை மய்யப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கதை. கோனார் செங்கண்ணா 200 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். ஜில்லா கலெக்டருக்கே பொண்ணு கேட்டு அவரது அப்பா வந்தபோது 'நிலம் ஒரு ஏக்கர்கூடக்கிடையாது என்று தெரிந்ததுடன், பையன் கலெக்டராக இருந்தாலென்ன, கவர்னராகத்தான் இருந்தாலென்ன; -கிடையாது பொண்ணு என்று கராலாகச்சொல்லி விட்டார்கள் " என்று சொல்லி நிலம் இல்லையெனில் கலெக்டருக்கே பொண்ணு கிடையாது என்று அனுப்பிவிட்டவர். இப்போது பேரனுக்கு பொண்ணு பார்த்துக்கொண்டிருக்கிறார்.பத்து ஏக்கர் கரிசல் நிலத்தில் விவசாயம் பார்க்கும் பேரன் செங்கன்னாவுக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள். கோனாரிக்கு பெண்களைப்பெற்ற தகப்பன்கள் சொன்ன பதில் ,"சம்சாரிகளுக்கு இனிமேல் நம்ம பொட்டைப்பிள்ளைகள் வாக்கப்படாது; வந்து கேக்காதீங்க. காத்துட்டு சம்பளமானாலும் கவர்மெண்ட் சம்பளம் இருக்கணும்; மாசம் இருநூறு சம்பாதிக்கிற வாட்ஸ்மேனாக இருந்தாலும் சரி அவனுகளைக் கட்டத்தயார் " என்று சொல்வதைச்சொல்லி கடைசியில் அவர் சொல்வதாக "...கடைசியிலே சம்சாரி கொத்தைப்பருத்தியிலும் கேவலமாகப்போயிட்டானே ... செ! " என்று சொல்வதாக கதை போகின்றது. ஒன்றுக்கும் உதவாத பருத்திபோல சம்சாரி திருமணச்சந்தையிலே தனிமைப்பட்டுப்போவதை ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்னால் கி.ரா. எழுதியிருக்கிறார். இன்றைய நிலைமை இன்னும் கொடுமை, விவசாயிகளின் நிலைமை கொடுமையோ கொடுமை......

                         பச்சிளம் குழ்ந்தைகள் தீப்பட்டி ஆபிசுக்கு எப்படி அதிகாலையில் சென்று நடு இரவில் திரும்புகிறார்கள்...பலியாகும் அவர்களின் குழந்தப்பருவத்தைச்சொல்கிறது 'ஒரு செய்தி 'என்னும் கதை. இந்தக் கதையைப் படித்த போது திருப்பரங்குன்றம் கவிஞர் இரா.ஜீவா அவர்களின் கவிதைகள் நினைவிற்கு வந்தன.
" கண் விழித்தால்
  கந்தக வாசல்
  கண் மூடினால் வீடு..
  நெருப்புக்காற்றை
  சுவாசிக்கவா
  அரும்புகளைப்
   பெற்றீர்கள் ...." என்பார் தனது 'கருகும் பிஞ்சுகள் ' கவிதைத் தொகுப்பில் . அந்தக் கவிதைகளின் கதைக்களன் விவரிப்பு போன்று இந்த 'ஒரு செய்தி ' என்னும் கதை இருக்கிறது. யாருக்கும் வெட்கமில்லை,குழந்தைத் தொழிலாளிகளாய் குமைந்து போகும் பிஞ்சுகளைப் பற்றி நினைப்புமில்லை. அதனை ஆழமாக நினைவுபடுத்துகிறது இந்தக்கதை.

நோயோடு பெற்றோர் இல்லாமல் வாழும் சுப்பண்ணா, அடுத்த ஊரில் தன்னை ஆதரித்து சோறு போட ஆட்கள் இருந்தாலும் அதனை மறுத்துவிட்டு ஏதோ ஒன்று இருப்பதாக எண்ணி தன் கிராமத்திற்கு திரும்பி வாழ்வதைச்சொல்லும் 'சுப்பண்ணா', கதை எதார்த்தம். இன்று(16.10.2017) கலைஞர் டி.வி.யில் அய்யா சுப.வீ. அவர்கள் அப்பண்ணா என்பவர் எழுதிய 'நான் ஊருக்குப் போகின்றேன்..அங்கு எனக்கென்று ஒருவரும் இல்லை "  என்னும் சிறுகதையைச்சொன்னார். எப்படி சொந்த ஊர் என்பது மனிதர்களை ஈர்க்கிறது என்பதனை. அப்படி மனநிலை பாதிக்கப்பட்டவன் போல இருக்கும் சுப்பண்ணா தனது சொந்த ஊருக்கு ஓடி வருவதையும் அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றாலும் உறவுக்காரர்களை உறவு முறைகள் மூலம் அழைத்து அழைத்து மகிழும் அவனின் பாத்திரப்படைப்பு பிறந்த மண்ணை நோக்கி இழுக்கும் 'ஏதோ ஒன்றை ' விவரிக்கும் முயற்சி எனலாம்.  சம்சாரி அவுரியை விளைய வைத்து கடைசியில் நல்ல விலை கிடைக்காமல் அதனைக் குப்பையில் போட்டு விட்டு இப்படியே இருக்கக்கூடாது , சம்சாரிகள் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் தாசரி நாயக்கரின் கதை சொல்லும் 'அவுரி ' என கதையும் களமும் கரிசல் காடு,கரிசல் சம்சாரிகள் என விரிகிறது.சம்சாரி அம்மணமாகப்போனாலும் கண்டுகொள்ளாத நவீன ஆட்சியாளர்கள் ஆளும் நாடு இது. இதில் இலக்கியவாதிகள் சொல்வதைப் படித்தா உணர்ச்சி வரப்போகிறது .....

                      'நாற்றம் வரும் முன்னே ! கிராமம் வரும் பின்னே ' என்று சொல்லும் 'சுற்றுப்புற சுகாதாரம் ' என்னும் கதை இன்றைய எதார்த்தம். கிராமத்தை எப்படியும் சுத்தப்படுத்திவிட வேண்டும் என்று நினைப்போடு கிராமத்திற்கு வரும் 'பைத்தியக்கார அதிகாரி ' தொடர்ந்து கிராமத்தை சுத்தமாக வைத்திருக்க செய்யும் ஏற்பாடுகளை விரிவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் அந்த அதிகாரி எடுக்கும் எந்த நடவடிக்கையும் பின்பற்றாமல் மறுபடியும் பழைய அசுத்த நிலைக்கே செல்லும் கிராம மனிதர்களை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் முழிக்கும் அதிகாரி, நல்ல பாத்திரப்படைப்பு. மூளையில் ஏற்படவேண்டும் மாற்றம். அப்போதுதான் மாறும்.....கடைசியில் "இனி ஊருக்குள்ளரப் போய்ப்பிரயோஜனம் இல்லை என்று தெரிந்துகொண்டார். என்ன செய்வது என்று தெரியவில்லை. யோசித்துவிட்டுப் பள்ளிக்கூடத்தைப் பார்த்து நடந்தார் " என்று முடிக்கின்றார் இக்கதையை. சுற்றுப்புற சுகாதார விழிப்புணர்வையும் நடவடிக்கையையும் பள்ளிக்கூடத்திலிருந்து ஆரம்பிங்கடா என்று சொல்வதுபோலக் கதை முடிகின்றது. இப்போது நடக்கும் தூய்மை இந்தியா கூத்துக்களை எல்லாம் பார்க்கின்றபோது , இந்தக் காலகட்டத்திற்கு மிக பொருத்தமான கதை.

                 தனது மனைவி மீனம்மாவிடம் கொஞ்சம் கூடுதல் கறி வாங்குவதற்காக நண்டு நாயக்கர் படும் பாட்டைச்சொல்லும் 'தாச்சண்யம்' புத்தகத்தில் சின்னக் கதை. 5 ரூபாய் பணத்தாள் -பூசையில் ,பூசை செய்பவர்கள் மத்தியில் செய்யும் மாற்றத்தைச்சொல்லும் 'குருபூசை ' இன்றைய பக்தியை நன்றாகவே பகடி செய்கிறது.நவீன கழிப்பறைக்கு முன்னால் குளிப்பதற்குப் பயன்படுத்தும் இடமான ;அங்கணம் ' பற்றி விவரிக்கும் அங்கணம் கதை போன தலைமுறையை சொல்லும் கதை. 'மும்மலைக் கிராமத்தையும்,அதன் மக்களையும், அந்த மலையையும், அங்கு வாழும் மயில்களையும்'சொல்லும் 'விடுமுறையில்' என்னும் கதை கூட்டாளிகளைத் தேடி அலையும் சிறுவனாய் இருந்ததை நினைவு கொள்பவரின் கதை.

               கிராமங்களில் நெல்லை அளக்கும்போது முதல் மரக்காலை லாபமென்று போடுவார்கள்.அதனைக் கணக்கில் சேர்க்கமாட்டார்கள். அப்படி பருத்தியை நிறுக்கும்போது 'வெங்கடாசலம் முன்னிற்க" என்று ஓசியாய் போடும் முதல் நிறுவையை மிகக் குத்தலாகச்சொல்லும் " வெங்கடாசலபதி முன்னிற்க ...; லாபம் " முன்னிற்க என்பதில் விழுந்த அழுத்தம் நாயுண்டுவுக்கு ரொம்பத்தான் எரிச்சலைக் கிளப்பி விட்டுவிட்டது..." முன்னிற்க; என்னத்த முன்னிற்க?" வெங்கடாசலபதியும் வெங்கடாசலபதியின் மில்லுந்தான் முன்னிற்கி! தா அவனுக்கு மாசம் அம்பது லச்சம் அறுபது லட்சம் உண்டியல்லே வந்து விழுது; இவனுகளுக்கு வருசம் அம்பது அறுபது கோடின்னு லாபம் வருது ".....போகிற போக்கில் வசவுச்சொற்களோடு கடவுளையும் முதலாளிகளையும் ஒரு சேர சம்சாரி திட்டுவதைக் காட்டுகின்றார்....'தாவைப்பார்த்து " என்னும் கதையில்...

              ஒரு கூட்டுக்குடும்பம் எப்படி வந்த மகாராசிகளால் சின்ன பின்னமாகி சிதைந்து போகிறது என்பதைச்சொல்லும் 'இவர்களைப் பிரித்தது ? " என்னும் கதை மிக ஆழமான கதை.மனதிற்குள் விழும் பிரிவினைக்கோடுகளை வரிசையாகப் பட்டியலிட்டு பின்பு எப்படி அது பெண்களின் சண்டையில் வெடிக்கிறது, கூட்டுக்குடும்பத்தை சிதைக்கிறது என்பதைச்சொல்கின்றார். அடியும் வசவும் வாங்கும் மாசாணம் முதலாளி கையாலேயே பால் ஊட்டப்படும் அளவிற்கு வளர்ந்த கதையைச்சொல்லும் 'நிலை நிறுத்தல் ' கொஞ்சம் வேறுபட்ட கதை. பாகம் பிரிக்கப்பட்டு தம்பி வீட்டில் அம்மாவும், அண்ணன் வீட்டில் பாட்டியும் எனப் பிரிக்கப்பட ,கடைசிக்காலத்தில் அவதிப்படும் அம்மாவின் கதை சொல்லும் 'உண்மை' கடைசிக்கதை. ஆனாலும் இந்த உண்மையும் நம்மைச்சுடச்செய்யும் கதைதான்.



            மொத்தம் 14 சிறுகதைகள். பெரியவர் கி.ரா.வின் மிகப்பெரிய பலமே கதையின் உரையாடல்களும் அந்த மக்களின் நடை,உடை பாவனைகளின் விவரிப்பும்தான். தன்னைச்சுற்றி இருக்கும் மனிதர்களை, அவர்களின் உரையாடல்களை அப்படியே எழுத்தில் கொண்டுவந்திருக்கின்றார். ஒரு பேட்டியில் முப்பது வயதிற்குப்பின்புதான் நான் எழுத ஆரம்பித்தேன் என்று கி.ரா.கூறியிருப்பார். இன்று 95 வயதை எட்டும் அவர், தனது 60-களில் எழுதிய கதைகளின் தொகுப்பாக இந்தக் கதைகள் உள்ளன. சிறுகதை வாசிப்பது என்பது ஒரு இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடுவது போன்றதொரு அனுபவம். அப்படி ஒரு வாசிப்பு அனுபவம் இந்தச்சிறுகதைகளை வாசிக்கும்போது ஏற்படுகின்றது. கிராமத்து மனிதர்களின் நம்பிக்கைகளை, அவர்களின் உழைப்பை, அவர்கள் ஏமாறுவதை,குடும்பங்களின் ரணங்களை எல்லாம் தனது எழுத்துக்கள் மூலம் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தும் அற்புத தொகுப்பாக இந்த 'கொத்துப்பருத்தி ' தொகுப்பு உள்ளது. நீங்களும் படித்துப்பார்க்கலாம். இரசித்து சிரிக்கலாம்..இந்தக் கரிசல்காட்டு சம்சாரிகளின் வாழ்க்கை மேம்பட என்ன செய்யலாம் என்பதனை யோசிக்கலாம்.












2 comments:

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க
வாழ்த்துகள் ஐயா.

முனைவர். வா.நேரு said...

நன்றி,வருகைக்கும் கருத்திற்கும்