Wednesday 29 November 2017

உடலின் தசைகள் ரோடெங்கும் சிதறி......

உடலின் தசைகள் ரோடெங்கும் சிதறி......
            வா.நேரு


கண்ணிமைக்கும்
நேரத்தில்
கண்முன்னே
நிகழ்ந்தது அது !

உடலின் தசைகள்
ரோடெங்கும் சிதறி
உதிரம் அங்கே
ஆறாய் ஓடி
ரோட்டின் நடுவே
அந்த இளைஞன்

இறங்கியவர்கள்
சென்றவர்கள்
வந்தவர்கள் எல்லாம்
108-ல் தொடர்புகொண்டு
உடனே வரச்சொல்லி
இடத்தின் அடையாளம்
சொன்னார்கள்

இன்னும் சிறிது
நேரத்தில்
இவனுக்க்காக
எவரெல்லாம் வரக்கூடும்

பெற்று வளர்த்தவர்கள்
பெயர் சூட்டி
அழைத்தவர்கள்
கல்லூரிக்குப் போய்வர
எமகா வண்டியை
வாங்கிக் கொடுத்தவர்கள்
வரக்கூடும் அழுது
அரற்றியபடி

எவர் பெற்ற
பிள்ளையோ தெரியவில்லை!
ஏன் இப்படி
எனவும் புரியவில்லை
வலிய சென்று மோதி
இப்படி சிதைந்து
சின்னா பின்னமாகி
உயிருக்குத் துடிக்கிறாயே!
இளைஞனே! அவ்வளவு
அவசரமாய்
எங்கேடா போனாய் ?

மின்னல் வேகத்தில்
என்னை முந்தினாய்
புயலெனவே
வளைவில் சுழன்று
சுழன்று சென்றாய்!
சொல்ல நினைக்கும்முன்பே
சொல்ல முடியாதபடி
சென்றாயே !
என் செய்வேன்!
என் செய்வேன் 1

சிறிது நிதானித்து
ஓட்டிருந்தால்
நீடித்து
வாழ்ந்திருக்ககூடும்
சில ஆண்டுகளில்
செய்ய நினைத்தவற்றை
செய்திருக்கக்கூடும்

எவரெல்லாம்
எனக்காக அழுவார்களோ
அவர்களுக்கெல்லாம்
நான் என்ன செய்தேன்
என இறக்கும்போது
நினைக்கிறாயோ !
ஓட்டும்போது
நினைத்திருந்தால்
இக்கோரம் இல்லையடா!

தலையிலே கவசமில்லை!
தலை தெறிக்க
ஓட்டுகிறோமே எனும்
நினைப்பும்
தலையில் இல்லை !
மரமண்டை போல்
வேகம் காட்டி
இப்படி மண்டை
உடைந்து கிடக்கிறாயே !
என் செய்வேன்!
என் செய்வேன்!

இளைய சமூகமே!
வேகத்தை வேலையில்
காட்டுங்கள் !
வாகனங்களில்
காட்டாதீர்!
வளர்த்த பெற்றோரை
வதைக்காதீர்
அணு அணுவாய் !

             24.11.2011 நவம்பர் 24-ல்'எழுத்து ' இணையதளத்தில் எழுதி வெளியான கவிதை. எனது பேஸ்புக் பக்கத்தில் இந்தக் கவிதையை பேஸ்புக் நினைவுபடுத்தியது. பேஸ்புக்கில் பகிர்ந்ததைப் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.
அன்புடன்
வா.நேரு, 30.11.2017