Tuesday 12 December 2017

ஆறறிவு உடையவர்கள்தானா நாம் ?......



பிடிங்குப் போடப்பட்ட
வேரை விடுத்து 
மரத்தின் கிளைகள் மட்டும் 
அங்குமிங்கும் 
அலைவது போன்றொரு
உணர்வு.........

ஒளியும் உணவும்
அளித்து 
வளர்த்தெடுத்த
வேரை 
மரத்தின் கிளைகளே
தங்களுக்குள்
சண்டையிட்டு
பிடிங்கிப் போட்ட
கொடுமை கண்டு மனதில்  
தோன்றும்  அயர்ச்சி....

வேரின் நினைவாய்
திதி என்றும் 
திவசம் என்றும்
அலையும் கிளைகளைப்
பார்க்கையில்
இயல்பாகத்தான்
செத்தனவா 
வேர்கள் எனும் 
கேள்விகளால் 
மண்டைக்குள் எழும்
விநோத ஒலிகள் ......

ஒரேயொரு 
ஊரிலே மட்டும் அல்ல
பல ஊர்களில் 
ஒரு மரத்தின் கிளைகள்அல்ல
இரு மரத்தின் கிளைகள் அல்ல
பல மரத்தின் கிளைகள்
வேர்களை பிடிங்கிப்போட்டு 
அங்குமிங்கும் 
அலைவதைப் பார்க்கையில்
ஆறறிவு உடையவர்கள்தானா
நாம்
எனும் கேள்வி
எழுவதைத் தவிர்க்க இயலா
உள்ளுணர்வு......

                                              வா.நேரு, 12.12.2017

No comments: