Wednesday 14 March 2018

வீரவணக்கம் ..தோழனே...இந்த நூற்றாண்டின் அறிஞனே !




வீரவணக்கம் ..தோழனே...
இந்த நூற்றாண்டின் அறிஞனே !
வீரவணக்கம் உனக்கு எங்கள் வீரவணக்கம் !

அசையாத உடல் இருக்கலாம் ஆனால்
அஞ்சாத உள்ளம் இருந்தால் அகிலமும்
உனைத் திரும்பிப்பார்க்கும் என
நிருபித்த இந்த நூற்றாண்டின் அறிஞனே!
வீரவணக்கம் உனக்கு எங்கள் வீரவணக்கம்!

ஒரு நாள் சாவது உறுதி எனினும்
இன்று சாவேனோ நாளை சாவேனோ
என அஞ்சி அஞ்சி சாகப்போவதில்லை
எவனுக்கும் அஞ்சாமல் சொல்லும்
கருத்துக்களால் அடுத்தடுத்த நூற்றாண்டில்
வாழும் மனிதர்கள் நினைவுகளிலும்
வாழ்வேன் என உரைத்து வாழ்ந்த தீரா...
வீரவணக்கம் உனக்கு எங்கள் வீரவணக்கம் !..

நேரில் உனைப் பார்த்ததில்லை
உனது நிழல் கூட எங்கள் மீது பட்டதில்லை...
கொண்ட கொள்கை உறுதிப்பாட்டால்
நீ கொண்ட விசாலப்பார்வையால்
உலகம் முழுக்க வாழும் நாத்திகர்களின்
வீரவணக்கம் பெற்றாய் தோழா ! உன் புகழ் வாழி !

கடவுளை மறுத்தாய் ! மறுபிறப்பா
எனக்கேட்டு மெதுவாய் சிரித்தாய்!
உலகத்தைப் படைத்தது கடவுளா ? எனக்கேட்டு
அறிவியலால்... உலகம் வளர்ந்தவிதத்தை
விவரித்தாய் !விளக்கினாய்!
இருக்கும் பூமி இன்னும் சில நூற்றாண்டில்
பழுதாகும்... அடுத்த கிரகத்தில் வாழ
மனிதர்களே ஆயுத்தப்படுங்கள் என்றாய்!....
குமித்துவைத்த மணல்கோபுரம்
ஒரு குத்து விட்டால் சரிதல்போல
கடவுள் கதைகள் அனைத்தும்
அறிவியலால் சரிந்திடவே வாதிட்டாய் !வென்றிட்டாய் !

உடம்பில் ஏதேனும் குறை என்றாலே
சுற்றி நிற்கும் உறவுக்கூட்டம்
அச் சடங்கை நீ செய்யவில்லை...
இச் சாமியை நீ கும்பிடவில்லை...
அதனால்தான் இந்தக் குறை எனக்
கைகாட்டி கள்ளத்தனமாய்
இக்கட்டு நேரத்தில் கடவுள் விற்பனை
செய்யும் முட்டாள்கள் மத்தியில்தான்
ஐம்பது ஆண்டுகளாய் சக்கர நாற்காலியில்தான்
வாழ்க்கை என்றாலும் தோழா நீ
கம்பீரமாகச்சொன்னாய் ....
சொர்க்கமாவது ....நரகமாவது ....
க்டவுளாவது ...கத்திரிக்காயாவது...
நோய்க்கும் கடவுளுக்கும் சம்பந்தமாவது....
என்று உரக்க உனது செயல்களால்
சொன்ன மாவீரா ! உன் புகழ் வாழி !

வலிமை என்பது உடலாளல்லடா கோழைகளே!
மனதால் என வாழ்ந்து நிருபித்தாய் !
இருபது வயதில் செத்துப்போவாய் என்றார்கள்
எழுபத்தி ஆறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறாய்!
நிறையவே உலகுக்கு அறிவியலால்
விட்டுச்சென்றிருக்கின்றாய்!தோழனே !
எங்கள் அறிவியல் அறிஞன் ஸ்டீபன் ஹாக்கின்ஸே !
வீரவணக்கம் ! உனக்கு எங்கள் வீரவணக்கம் !

                                                     வா.நேரு,
                                                     மாநிலத்தலைவர்,
                                                     பகுத்தறிவாளர் கழகம்,தமிழ்நாடு....
                                                      14.03.2018 ....

No comments: