Tuesday 20 March 2018

முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் ...உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து

மகிழ்ச்சியாக இருப்பவரை எந்த நோயும் அண்டாது என்று இந்திய கிராமங்களில் சொல்வார்கள். இதையே கொலம்பியா எழுத்தாளர் கேப்ரியல், சந்தோஷத்தால் குணப்படுத்த முடியாத நோயை, உலகின் எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது என்கிறார். மகிழ்ச்சி அனைத்தையும் குணப்படுத்தவல்லது.

ஆனாலும் அனைவராலும் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தோஷத்தை தீர்மானிப்பதில் குடும்பம் முதல் உலக அரசியல் வரை பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அண்மையில் ஐ.நா வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 133 வது இடத்தில் இருக்கிறது. இன்னும் துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் சந்தோஷ விஷயத்தில் காங்கோவுக்கும் நைஜீரியாவுக்கும் மத்தியில் இருக்கிறது இந்தியா.

உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து : ஐ.நா அறிக்கை
ஃபின்லாந்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. உலகெங்கும் குடிபெயர்தல் பிரச்னை தலைப்பு செய்தியாக இருக்கும் இக்காலக்கட்டத்தில், ஃபின்லாந்தில் குடியேறியவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறது இந்த ஐ.நா அறிக்கை.

இது எப்படி சாத்தியமானது?

இலவச கல்வி, தரமான சுகாதாரம்

மகிழ்ச்சி என்பது ஒரு அகநிலை அனுபவம். ஆனால், அதையெல்லாம் கடந்து எம்மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இலவச கல்வியும், தரமான சுகாதார வசதியும்தான் காரணம் என்கிறார் ஃபின்லாந்தை சேர்ந்த அன்ட்டி காப்பினன்.

அதே மனநிலையில் அவர், "என்தேசம் குறித்து நான் பெருமை கொள்கிறேன். ஐ.நா அறிக்கைகாக அல்ல. இந்த மகிழ்ச்சி குறியீடு அறிக்கையில் என் நாடு இடம் பெறாமல் போயிருந்தாலும், நான் இதே மனநிலையில்தான் இருப்பேன்."என்கிறார்.

எல்லாருக்கும் எல்லாமும்

மேலும் அவர், "எல்லாருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்பு இங்கு இருக்கிறது. அது அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமல்ல, இரண்டாவது உலக போருக்குப் பின் இங்கு எந்த அரசியல் நெருக்கடியும் நிலவவில்லை. ஃபின்லாந்த் ஒரு நடுநிலையான நாடு. எங்களுக்கு யாருடனும் விரோதம் இல்லை." என்கிறார்.

"நாங்கள் இருபத்துநான்கு மணிநேரமும் வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டோம். ஓய்வு நேரங்களை எங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் செலவிடுவோம். இசை, குடும்பம், விளையாட்டு என எங்களுக்கு விருப்பமானவற்றில் மூழ்குவோம். இவையெல்லாம்தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமென்று கருதுகிறேன்." என்கிறார் அதே மகிழ்வுடன்.

முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் எங்கள்நாடு வாய்ப்பு வழங்குகிறது.
சமத்துவம்

இதே கருத்தைதான் முன் வைக்கிறார் தொடர்பியல் துறை மாணவரான யெனா வுரெலாவும். இலவச கல்வியையும், தரமான மருத்துவ வசதியையும் சுட்டிக்காட்டும் யெனா, "ஃபின்லாந்து ஒரு பாதுகாப்பான நாடு. இங்கு யாருக்குள்ளும் எந்த வேற்றுமையும் இல்லை. முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் எங்கள்நாடு வாய்ப்பு வழங்குகிறது. இவையெல்லாம் எங்களை மகிழ்சியாக வைத்துக் கொள்கிறது." என்கிறார்.

இந்த ஆய்வில் வெளிநாடுகளிலும் குடியேறியவர்களும் ஃபின்லாந்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக யெனா, " எங்கள் நாட்டில் குடியேறியவர்களிடமும் நாங்கள் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை. ஒரு ஃபின்லாந்து நாட்டவருக்கு என்னென்ன வாய்ப்புகள் எல்லாம் கிடைக்குமோ... அது அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவருக்கும் என் நாடு வழங்குகிறது. அம்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒரு விஷயம் சம்பந்தப்பட்ட ஒருவரை சந்தோஷப்படுத்துகிறது என்றால், அது சரி என்றுதானே அர்த்தம். அந்த `சரி` எங்களுக்கும் (ஃபின்லாந்து மக்கள்) மகிழ்ச்சியையே தருகிறது.


கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் நார்வே முதல் இடத்தில் இருந்தது. ஃபின்லாந்து ஐந்தாவது இடத்தில் இருந்தது.

மகிழ்ச்சிக்கான முதலீடு

நார்வே, சுவீடன் என நார்டிக் நாடுகளில் தனது நானோ தொழிற்நுட்ப ஆய்வை மேற்கொண்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர் , "நார்டிக் நாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் அங்கீகரிக்கின்றன. அனைவரையும் எப்போதும் கொண்டாட்டத்தில் வைத்திருக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. அதனால்தான், நார்டிக் நாடுகள் இந்த மகிழ்ச்சி குறியீடு பட்டியலில் எப்போதும் முதல் பத்து இடத்தில் இருக்கின்றன." என்கிறார்.

மேலும், "மக்களை கொண்டாட்டத்தில் வைத்திருப்பதற்காக அவர்கள் செலவிடும் தொகையை செலவாக அந்நாட்டு அரசுகள் கருதுவதில்லை. அவர்களை பொறுத்தவரை அது `சமூக முதலீடு`. மனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும். அப்படி சிந்தித்தல் நல்ல விளைவுகளை கொண்டு வரும் என்று அந்நாட்டு அரசுகள் தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்கின்றன. அதற்காக மெனக்கெடுகின்றன. அதனால் அவை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த வியப்பும் இல்லை." என்று விவரிக்கிறார் விஜய் அசோகன்.

மனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும்.
குரோதமில்லை... வெறுப்பில்லை

நார்டிக் நாடுகளில் வரி அதிகம்தான். ஆனால், பெறும் வரி அனைத்தும் மக்கள் நல திட்டங்களுக்காக மட்டும்தான் செலவிடப்படுகிறது. அதனால், பெரும்பாலும் அம்மக்களுக்கு வரி குறித்த எந்த வருத்தங்களும் இல்லை என்கிறார் அவர்.

"வெளிநாடுகளிலிருந்து அங்கு குடிபெயர்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் அலாதியானது. தாய் மொழி கல்வியை அந்நாடுகள் ஊக்குவிக்கின்றன. உதாரணமாக, முப்பது குடும்பங்கள் சேர்ந்து எங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு ஆவனசெய்ய வேண்டும் என்று அரசிடம் முறையிட்டால், அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். அனைத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இப்படியான சமூகத்தில் வெறுப்பிற்கும், குரோதத்திற்கும் எங்கு இடம் இருக்கப் போகிறது. எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான்" என்கிறார் விஜய் அசோகன்.
நன்றி : பி.பி.சி. தமிழ் 20.03.2018..படங்கள் சேர்க்கப்படவில்லை


No comments: